பங்களாதேஷ் – இலங்கை; கொவிட்-19க்கு பின்னரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம்

i 1
i 1

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறுவது (12 ஆம் திகதி) உறுதி செய்யப்பட்டது.

பங்களாதேஷ் – இலங்கை அணிகள் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக விளையாடவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையும் முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட இந்த கிரிக்கெட் தொடரினை விரைவில் நடாத்துவதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்திருந்தன. இறுதியில் இந்த பேச்சுவார்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததனை அடுத்தே, இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடு உருவாகியிருக்கின்றது.

இந்த டெஸ்ட் தொடர் பங்களாதேஷ் – இலங்கை ஆகிய இரண்டு நாட்டு அணிகளும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்ட பின்னர் விளையாடவுள்ள முதல் சர்வதேச தொடராகவும் அமையவிருக்கின்றது.