கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது! – கவிஞர் தீபச்செல்வன்

.jpg
.jpg

இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டன. ஈழ இறுதிப் போரின் போது அழிக்கப்பட்ட தமிழ் மக்கள் நந்திக்கடலில் கொன்று எரியப்பட்டனர். அதற்கு முன்பாகவே கடலில் பல இனக் கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் குமுதினிப்படுகொலை.

ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. ஈழத்தின் மிகப் பெரிய தீவு என்பதனால் நெடுந்தீவு என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடுகின்ற போது, அடிப்படைவசதிகளற்ற நிலையில் இருக்கிறது நெடுந்தீவு. எனினும் பல அறிஞர்களையும் கலைஞர்களையும் ஈழத்திற்கு அளித்த மிக முக்கியமான தீவு இதுவாகும். இத் தீவுக்கான போக்குவரத்து புங்குடுதீவில் இருந்து படகு வழியாகவே அன்று தொட்டு இன்றுவரையில் மேற்கொள்ளப்படுகின்றது.

மே 15ஆம் நாள். 1985ஆம் ஆண்டு. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகு பயணிகளை சுமந்து சென்றது. அன்றைக்கு காலையில் 7.15மணிக்கு 64 பயணிகளை ஏற்றிய குமுதினிப்படகு, நயினாதீவுக்குச்சென்றது. வழமைபோலான பயணம். கடலை ரசித்தபடி சென்ற மக்களுக்கு இலங்கை கடற்படையின் அச்சம் உள்ளுக்குள் இருந்தது. ஆனாலும் எதிர்பாராதபடி இலங்கை இராணுவத்தின் இரண்டு பிளாஸ்டிக் படகுகள் சூழ்ந்தன. இடைமறித்த படகுகளை கண்டு மக்கள் திகைத்துப் போயினர்.

இலங்கை அரச படைகளை சேர்ந்த ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். படகின் பின்னால் இருந்த மக்களை படகின் இயந்திர அறைக்கு வருமாறு ஆயுதங்களால் படைகள் மிரட்டினர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இயந்திர அறை இருக்கை மட்டத்திலிருந்து 4 அடி ஆழமாக இருந்தது. அதற்குள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். பயணிகளோ அச்சத்துடன் உள்ளே சென்றனர்.

இலங்கை அரச படைகள் மிக மோசமான இன அழிப்பாளர்கள் அல்லது கொலையாளிகள் என்பதற்கு அன்றைய காலத்தில் நடந்த இந்தப் படுகொலையே பெரும் சாட்சி. குமுதினிப் படகின் இரு பக்க வாசல்களிலும் சீருடை தரித்த இலங்கை கடற்படையினர் காவலுக்கு நிற்கவே சீருடையற்ற படையினர் இந்தப் படுகொலையைப் புரிந்தனர். ஒவ்வொருவராக இயந்திர அறைக்குள் அழைத்த கடற்படையினர், மக்களை கத்தியால் குத்தியும் கோடாலியால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கியும் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டவர்களை ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் சித்திரவதைகளின் அவல ஒலி கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் கத்திச் சொல்லுமாறு கடற்படையினர் கூறினர். ஒரு பக்கம் கடல் இரைச்சல். மற்றொரு பக்கம் இராணுவத்தின் மிரட்டல். அவலக் குரலை எழுப்பி வதையை வெளிப்படுத்தாமலே அவர்களில் பலர் இறந்து போயினர். கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டு கடலில் அவர்கள் வீசப்பட்டனர்.

கடற்படையினரின் அராஜகத்தை கண்ட ஒருவர் கடலில் குதித்தார். அவருடன் சேர்ந்து மேலும் பலர் கடலில் குதித்தனர். அவர்கள்மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் படைகள். இந்தப் படுகொலையின் ஒரு நேரடிச் சாட்சி இப்படி சொல்கிறார். “எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்படியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.” என திகிலான அவ் நிமிடங்களை விபரித்தார்.

இந்தக் கொடூரப் படுகொலையின் போது, பிறந்து ஏழு மாதம் மாத்திரமேயான விஸ்வலிங்கம் சுபாசினி என்ற பச்சிளம் பாலகி படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் எழுபது வயதான தெய்வானை என்ற முதிய தாய் வரையிலாக 36பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குமுதினிப்படுகொலையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பில் சரியாக கூற இயலவில்லை என்று சில சர்வதேச அமைப்புக்கள் கூறியிருந்தன. 23பேர் இதன்போது படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியிருந்தது.

இப்படுகொலையை இலங்கை கடற்படையின் நயினாதீவு கடற்படையே மேற்கொண்டது என குற்றம் சுமத்தப்பட்ட வேளையில் இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி இதனை மறுத்திருந்ததுடன், இதனை செய்தது யார் என்று தமக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார். ஆனால் இலங்கை அரச கடற்படையினரே இதனை செய்தனர் என்பது தெட்டத்ததெளிவானது. அதற்கு பாதிக்கப்பட்ட மக்களே நேரடிச் சாட்சிகளுமாவார். கடந்த 2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 72 பேர் பயணித்த படகில் 36பேர் கொல்லப்பட்டதாகவும் உயிர் தப்பியவர்களின் வாக்குமூலங்களும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் நவம்பர் 22, 2006ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இலங்கை அரச படைகள் புரிந்த மிக கொடூரமான படுகொலையாக குமுதினிப்படுகொலை இனம்காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் பல விடங்களை வெளிச்சத்திற்கு உட்படுத்தப்படுகின்றது. எனினும் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்ற இன்றைய நிலையில், இப்படுகொலை குறித்து துளியேனும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

மே 15 ஈழத் தமிழ் மக்களுக்கு கடலே சவக்குழியான நாள். அதன் பிறகு கடலில் தமிழ் மக்களை கொல்கின்ற படலங்களை இலங்கை கடற்படைகள் எந்த தயக்கமும் தடையுமின்றி மேற்கொண்டன. கிளாலிக் கடலே ஈழ மக்களின் சடலங்களால் நிறைந்ததது. இவைகள் எவற்றுக்கும் தண்டனையும் இல்லை. நீதியும் இல்லை. இறுதியில் மிகக் கோரமாக லட்சம் மக்கள் நந்திக்கடலிலும் முள்ளிவாய்க்காலிலும் கொன்று வீசப்பட்டனர். அதற்கும் நீதியில்லை. நாம் வாழ்ந்த நிலமும் நாம் நீந்தும் கடலும் சவக்குழியானது எமக்கு. குமுதினிப்படுகொலை போன்ற இரக்கமற்ற கொடுஞ்செயல்கள் முதல், நந்திக்கடல் கொலைகள் வரை நீதியான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்பதே எம் மக்களின் நிலை.

தமிழ்க்குரலுக்காக கவிஞர் தீபச்செல்வன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)