சஜித்தின் திமிர் யார் காரணம்?

sajith thimir
sajith thimir

சாதாரண தமிழ் மக்களுடன் பேசுகின்ற போது அவர்களில் பலர் சஜித் பிரேமதாச பற்றி பேசுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்படித்தான் முன்னர் மைத்திரிபால பற்றி பேசியிருந்தனர். இறுதியில் ஏமாந்து போயினர். ஆனால் இம்முறை பொதுவாகவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியி;ல் அக்கறையற்ற தன்மையே காணப்படுகின்றது. அதற்கு அனேக காரணமுண்டு. அதனை பின்னர் பார்ப்போம். ஆனால் கூட்டமைப்பை வழிநடத்தும் சம்பந்தன்- சுமந்திரன் தரப்போ, சஜித்தை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் சஜித் கூட்டமைப்பிலிருந்து சற்று எட்ட நிற்பதாகவே தெரிகிறது. இதுவரை அவர் கூட்டமைப்புடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. அதே போன்று கூட்;டமைப்பும் அவருடன் எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் எம்.ஏ.சுமந்திரன், எழுத்து மூல உடன்பாடு தொடர்பில் பேசியிருக்கிறார். கடந்த தேர்தலிலோ, எழுத்து மூல உடன்பாடு தொடர்பில் பேசினால், அது மகிந்த ராஜபக்சகவிற்கு சாதாகமாகவிடும் என்று கதைசொன்ன சுமந்திரன் இப்போது எதற்காக அது பற்றி பேசுகின்றார்? ஆனால் கூட்டமைப்பின் எந்தவொரு கதைகளையும் சஜித் கண்டுகொள்ளவில்லை. அத்துடன், தான் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்படக்கூடிய நபரல்ல என்றும் அவர் கூறுகின்றார். கூட்டமைப்பின் நிபந்தனைகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொள்ளும் எவரும் தன்னுடன் இணைந்து செயற்படலாம் ஆனால் எவரும் தனக்கு நிபந்தனைகளை விதிக்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருக்கின்றார் சஜித். இது எதனை காட்டுகின்றது? 

சஜித் பிரேமதாசவின் கொள்கைதான் என்ன? இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு. இதற்குட்பட்டுத்தான் அனைவரும் வாழ வேண்டும். இலங்கையின் மீது எந்தவொரு வெளியக தலையீடுகளையும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழர்களுக்கு என்று எந்தவொரு தாயகமும் இங்கில்லை. இதற்கும் மேல் அவர் இன்னொரு விடயத்தையும் அண்மையில் குறிப்பிட்டிருகின்றார் – அதாவது, தான் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சிறுபாண்மையினர் என்று எவருமே இருக்க மாட்டார்கள் – இதற்கு என்ன பொருளாம்? இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள்தான் தற்போது சஜித் அணியில் நிற்கின்றனர். அந்த அணியில் கூட்டமைப்பும் சேர முடியுமா? இங்கு கவனிக்க வேண்டிய விடயம் கூட்டமைப்பு வலிந்து சேர்வதற்கு சென்றாலும் கூட, சஜித் கூட்டமைப்பை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் நிலையில்லை. ஏனெனில் கூட்டமைப்புடன் தன்னை அடையாளம் காட்டுவது தனது சிங்கள – பௌத்த வாக்குகளை குறைத்துவிடும் என்றே சஜித் கருதுகிறார். அண்மையில் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவரை சந்தித்திருந்த பசில்ராஜபக்ச இவ்வாறு கூறினாராம். அதாவது, நாங்கள் உங்களுடைய ஆதரவை எதிர்பார்க்கவில்லை ஏனெனில் நீங்கள் எங்களுடன் நின்றால் அது எங்களைத்தான் பாதிக்கும். எவ்வாறு மகிந்த தரப்பு, கூட்டமைப்பின் ஆதரவை பெறவிரும்பவில்லையோ அதே போன்றுதான் சஜித்பிரேமதாசவும் கூட்டமைப்பின் ஆதரவை வெளிப்படையாக விரும்பவில்லை. இரண்டு பிரதான வேட்பாளர்களுமே சிங்களவர்கள் தொடர்பில்தான் சிந்திக்கின்றனர். அவ்வாறாயின் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாடு என்ன? இதன் காரணமாகவே சஜித், மிகவும் திமிராக பேசுகின்றார். தமிழ் மக்கள் மகிந்த தரப்பிற்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவே அவர்களுக்கு எனக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழியில்லை. இதுதான் சஜித்தின் எண்ணம்.

சஜித்தின் அரசியல் வாழ்வில் அவர் ஒரு போதுமே தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் எங்குமே ஆதரவாகப் பேசியதில்லை. தனது தகப்பனாரை கொன்றவர்கள் புலிகள் என்னும் எண்ணத்திலேயே அவரது அரசியல் வாழ்வு நகர்ந்தது. அவர் எந்தவொரு தமிழ் தலைவரோடும் உறவாடியதிலலை. தேசிய இனப்பிரச்சினை தொடர்பான ஜக்கிய தேசியக்கட்சியின் அணுகுமுறைகள் என்பது பெருமளவிற்கு ரணிலின் தனிப்பட்ட விவகாரமாகவே இருந்தது. சஜித்தை பொறுத்தவரையில், கூட்டமைப்பின் பிரச்சினையை ரணில் பார்த்துக் கொள்ளட்டும் என்னும் மனோபாவத்திலேயே கூட்டமைப்பை உதாசீனம் செய்து வருகின்றார். இதிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் எந்தவொரு உறுதிமொழியையும் சஜித் வழங்கப் போவதில்லை. அதற்குப்பதிலாக, ரணில் விக்கிரமசிங்கவே தனிப்பட்ட ரீதியில் உறுதிமொழிகளை வழங்கப்போகின்றார். இதே போன்றதொரு நிலைமைதான் 2015 ஜனாதிபதி தேர்தலிலும் இடம்பெற்றது. அதாவது, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பதிலாக சந்திரிக்கா குமாரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்கவுமே கூட்டமைப்பிற்கு உறுதியளித்திருந்தனர். அதனை நம்பியே கூட்டமைப்பும் கடந்த நான்கு வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் இழுபட்டுச் சென்றது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் போது, கூட்டமைப்பு ரணிலின் பக்கமாக நின்றது. இதனால் மைத்திரியின் பகையை சம்பாதிக்க நேர்ந்தது. அதன் காரணமாக, அதுவரையான அரசியல் முன்னெடுப்புக்கள் அனைத்தும் செல்லாக்காசாகியது. ஒரு வேளை சஜித் பிரேமதாச ஜனாதிபதியானாலும் மீ;ண்டும் பழைய குறுடி கதவை திறடி நிலைதான் ஏற்படும். ரணில் பிரதமரானால், அது நிச்சயம் ரணிலுக்கும் சஜித்திற்குமிடையிலான அதிகார மோதலுக்கே வழிவகுக்கும் ஏனெனில் ரணிலின் தலைமையை எதிர்த்துத்தான் சஜித் வேட்பாளராகியிருக்கின்றார் அல்லது ரணிலை பிரதமராக நியமிக்க சஜித் மறுத்தாலும் கூட்டமைப்பிற்கு ரணில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு சஜித் பொறுப்பெடுக்க வேண்டியதில்லை. 2015இன் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முன்னணி வகித்த மங்களசமரவீரதான் இப்போது சஜித்தின் ஆலோசகர். அது ஒரு தெளிவான செய்தியை சொல்லுகின்றது. அதாவது, மங்களிவின் இலக்கு அடுத்த பிரதமராவதுதான். மங்களவும் அமெரிக்காவின் நன்பர்தான். இவ்வாறானதொரு அதிகார போட்டியில் கூட்டமைப்பு எவ்வித வாகுறுதிகளை பெற்றாலும் அதற்கு எந்தவொரு பெறுமதியும் இருக்கப் போவதில்லை.

தமிழ் மக்களது தலைமையின் எந்தவொரு நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஆனால் தமிழ் மக்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்று சஜித் எண்ணுவதானது மிகவும் ஆபத்தானது. இது தமிழ் மக்களை மிகவும் இழக்காரமாக பார்க்கும் ஒரு நிலைமையாகும். ஒரு தேசிய இனம் இந்தளவிற்கு தரம் தாழ்ந்து கிடப்பதை என்வென்பது? இதற்கு யார் காரணம்? 2009இற்கு பின்னர் இடம்பெற்ற இரண்டு ஜனாதிபதி தேர்தல்களின் போதும் கூட்டமைப்பின் அணுமுறைகள் மிக மோசமான தந்திரோபாய தவறுகளாகவே அமைந்திருந்தன. 2010இல் மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்காக, யுத்த வெற்றியை கூறுபோடும் தேர்தல் வியூகமொன்று வகுக்கப்பட்டது. அதற்கு கூட்டமைப்பு உடன்பட்டிருக்கக் கூடாது. அப்போது ஒரு இராணுவத்தளபதிக்கு வாக்களிக்குமாறு எங்களுடைய மக்களை கோர முடியாதென்று, சம்பந்தன் திட்டவட்டமாக கூறியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ யுத்த வெற்றியை பங்குபோடும் தேர்தலில் தமிழ் மக்களை ஈடுபடுத்தினார். அதன் பின்னர் எந்தவொரு உடன்பாடுமின்றி, மைத்திரிபாலவிற்கு வாக்களிக்கும் முடிவை எடுத்தார். இந்த இரண்டு தேர்தல்களின் போதும் கூட்டமைப்பு தமிழ் மக்களை நடத்திய விதத்திலிருந்துதான், கொழும்பு கூட்டமைப்பையும் அதனை ஆதரிக்கும் தமிழ் மக்களையும் எடைபோட்டுக் கொண்டது. தமிழ் மக்கள் ஒருவரை காட்டி இன்னொருவருக்கு வாக்களிக்கும் இயல்பு கொண்டவர்கள் என்பதை ஜக்கிய தேசியக் கட்சி தரப்பினர் நன்றாக விளங்கிக்கொண்டனர். இந்த பின்புலத்திலிருந்துதான் சஜித் பிரேமதாசவும் தமிழ் மக்கள் வேறு வழியின்றி தனக்கே வாக்களிப்பார்கள் என்று இழக்காரமாக எண்ணுகின்றார். தமிழ் மக்கள் உரிமைக்காக போராடிய ஒரு இனம் என்னும் வகையில், இது ஒரு மோசமான அரசியல் நிலைமையாகும். ஒரு இனம் வேறு வழியின்றி தங்களை எந்த வகையிலும் சமமாக நடத்த முடியாதென்று கூறும் ஒருவருக்கே வாக்களிக்க முற்படுவதானது, அந்த இனம் அரசியல் ரீதியில் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துகொண்டிருக்கின்றது என்றுதானே பொருள். அத்துடன் அந்த இனம் ஒரு சரியான தலைமையற்று இருக்கின்றது என்பதுதானே பொருள். 

இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்களை வழிநடத்தப் போபவர்கள் யார்? ஒன்றில் தமிழ் மக்கள் தங்களை தாங்களே வழிநடத்திக்கொள்ள வேண்டும். அதாவது, கடந்த இரண்டு தேர்தல்களின் போதும் தாங்கள் வாக்களித்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? முக்கியமாக தாங்கள் பெரும் நம்பிக்கையுடன் வாக்களித்த மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் நடவடிக்கைகள் எதனை உணர்த்துகின்றது? வெறுமனே ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிட்டு வாக்களிக்கும் முறைமை சரியான ஒன்றுதானா? இப்படியான கேள்விகளுக்கு விடைகளை தேடும் போது, இந்தத் தேர்தலில் பங்குபற்றி ஏமாறத்தான் வேண்டுமா என்னும் பதிலே கிடைக்கும். தமிழ் மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்கும் அரசியல் கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூக தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு தீர்க்கமான முடிவை மக்களுக்கு கூற வேண்டும். மக்களை இந்த விடயத்தில் அறிவூட்டி வழிநடத்த வேண்டும். ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு முடிவெடுப்பதற்கு இது புடைவை கடையில் உடுப்பு வாங்கும் பிரச்சினையில்லை. இது தமிழர் தேசத்தின் பிரச்சினை.

– கரிகாலன்