பொன்னம்பலம் குடும்பத்திற்காக பலியிடப்பட்ட மணிவண்ணன்…!

Aasiriyar paarvai mani copy
Aasiriyar paarvai mani copy

தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப்படும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பது ‘பாட்டன் கட்சியே’ முக்கியம் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்று பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். இப்போது மணிவண்ணனுக்கு எதிராக அக் கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை அதனை நிரூபித்துள்ளன.

தமிழ் இளைஞர்களின் ஆதரவை கொண்டிருக்கும் மணிவண்ணனுக்கு எதிரான அக் கட்சியின் சூழ்ச்சிகள், தமிழ் இளைய சமுதாயத்தின் அரசியல் நம்பிக்கையை தகர்க்கும் ஆபத்துக் கொண்டது. மணிவண்ணன், வெல்ல வைக்கப்பட வேண்டியதொரு வேட்பாளர் என்பதை தமிழ்க்குரல் தேர்தல் சமயத்தில் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன் கடந்த தேர்தலில் 22 ஆயிரத்தை கடந்த விருப்பு வாக்குகளை மணிவண்ணன் பெற்றிருக்கிறார். இது அவர் மீதான இளைய சமுதாயத்தின் நம்பிக்கையாகவே வெளிப்படுகின்றது. இதுவே கஜேந்திரகுமாருக்கு சிக்கலாகவும் வேண்டத்தகாததாகவும் மாறியிருக்கிறது. என்பதை சொல்வதற்கு பெரிதான ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை.

ஏனெனில் பாட்டனின் கட்சியை காப்பாற்றுகின்ற நோக்கில் எல்லோர் மீதும் சேறு பூசி, துரோகப் பட்டங்களை கட்டுவதில் கஜேந்திரகுமார் ‘வாய்’ தேர்ந்தவர். இப்போது தன் பாட்டனின் கட்சிக்காக மணிவண்ணனை கஜேந்திரகுமார் பலியிடுகிறார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், தேசிய அமைப்பாளர் பதவிகளில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும் – இன்னமும் பதவியேற்காத நிலையிலேயே கஜேந்திரகுமார் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து மணிவண்ணன் அக் கட்சிக்காக கடுமையாக உழைத்து வருகின்றார். 2010ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், கஜேந்திரகுமார் போன்றவர்கள் அவதூறுகள், வசைகளை தேர்தல் பிரசாரமாக மேற்கொண்ட போது, அவதூறுகளை பேசாமல், கொள்கையை மக்கள் மத்தியில் கனிவாக எடுத்துரைத்த இளம் அரசியல்வாதியாக தன் பயணத்தை தொடங்கினார் மணி.


இன்று வரையில் அந்த நல்ல பண்பிலிருந்து அவர் விலகவில்லை. அதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏக அரசியல் சூழலில் அவருக்கு இளைஞர் மத்தியில் ஆதரவை பெருக்க காரணமாக இருந்தது. குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்று மணிவண்ணன் வலியுறுத்தி வந்தார். கூட்டமைப்பை பதிவு செய்யவில்லை என்று கூறும் கஜேந்திரகுமார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பதிவு செய்யாமல், சைக்கிளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற தன் பாட்டனின் அடையாளத்தையும் காப்பாற்ற சாக்கு போக்கு சொல்லி பதிவைத் தள்ளிக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் மணிவண்ணன் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துவதும் அவர் மீது வன்மம் கொள்ள காரணமாகும்.

அதேபோல வழமை போன்று அவதூறுகளை அள்ளி இறைத்து, கட்டுக் கதைகளை பேச கஜேந்திரகுமார் பின் நிற்பதில்லை. யாழ். மாநகர சபையில், ஈ.பி.டி.பிக்கு ஆதரவு கொடுக்க நின்றார் என்றும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரிக்க முனைந்தார் என்றும் இன்று காரணம் கூறும் கஜேந்திரகுமார் அணியினர், தேர்தலை எதிர்கொள்ள முதல், வெற்றி பெற முதல் பல மாதங்களுக்கு முன்னரே இதனை செய்திருக்கலாம் அல்லவா? இப்போது எதற்காக மணிவண்ணன் மீது பழிவாங்கலை மேற்கொள்கின்றார்?
ஏனெனில், இம்முறை தேர்தலில் மணிவண்ணன் 22 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று – கட்சியில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தார். கஜேந்திரகுமார் பெற்ற வாக்குகள் 31ஆயிரம். கஜேந்திரன் பெற்ற வாக்குகள் 24ஆயிரம். எதிர்வரும் காலத்தில் மணிவண்ணனுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்பதாலும் கட்சியில் அவரை வளர விடக்கூடாது என்பதனாலுமே இப்போது அவசர அவசரமாக மணியின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற இனத்தின் எதிர்பார்ப்பின் மத்தியில் கஜேந்திரகுமார் முன்னெடுத்துள்ள இந்த மோசடி எவ்வளவு மோசமானது?


தமிழ் காங்கிரஸ் கட்சியை 60 ஆண்டுகளாக பொன்னம்பலம் குடும்பம் ஆள வேண்டும் என்றால், சிங்களம் தமிழரை அடிமைப்படுத்தி ஆள வேண்டும் என நினைப்பதும் சரியாகிவிடும் அல்லவா? காலத்திற்கும் சூழலமைவுக்கும் இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும் ஏற்ப தமிழ்த் தேசிய அடையாளத்தை சூட்ட மறுக்கும் கஜேந்திரகுமாரின் தந்திர தனத்தில், பாட்டன் கட்சி என்ற பற்று மாத்திரமே ஒளிந்திருக்கிறது. அது இனமாக, மக்களாக, சிந்திக்கும் இளைஞர்களை எப்போதும் பலி கொள்ளும் என்பதற்கு மணி நல்ல சான்று.

சில பிரிவுகளும் இணைவுகளும் காலத்தேவை என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டியுள்ளன. தமிழ்த் தேசிய அரசியலில் இனப் பற்றும் நாகரிகமான சட்ட நுணுக்கமும் கொண்ட அரசியல் அணுகுமுறையும் உள்ள மணிவண்ணன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் – அவர் கட்சியில் இணைந்து கொள்வது காலத்தின் தேவையாகும். இனத்தின் மீதான தன் அரசியல் பற்றை நீதிக்கான பயணத்தில் இணைத்துக்கொண்டால், தமிழர் தேசத்திற்கும் தமிழ் இனத்திற்கும் அது நன்மை பயப்பதாக அமையும்.

தமிழ்க்குரல் – ஆசிரியர் பீடம்
15.08.2020