எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் எதிர்வரும் வாரத்தில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிவாயு விபத்துகள் தொடர்பான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
அவர்களை நிபுணர் குழுவிற்கு அழைத்து வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அதன் தலைவர் சாந்த வல்பலகே தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் முதல் கட்ட விசாரணை தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விபத்து தொடர்பான நிபுணர் குழுவின் விசாரணைகளுக்கு அமைய இதுவரையில் லிட்ரோ நிறுவனத்தின் களஞ்சியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த குழுவினால் பியகம பகுதியில் உள்ள லாஃப்ஸ் நிறுவனத்தின் களஞ்சியசாலை வளாகத்தில் நேற்று (04) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருந்த போதிலும் அந்த செயற்பாடு இடம்பெறவில்லை.
லாஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு உற்பத்தி குறைந்த அளவில் காணப்படுகின்றமையால் அதன் களஞ்சியசாலையில் மேற்கொள்ளப்படவிருந்த பரிசோதனை நடவடிக்கைகளை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக குறித்த குழுவின் தலைவர் சாந்த வல்பலகே தெரிவித்தார்