கொரோனா குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை; புது அச்சம்!

3 eee
3 eee

கொரோனா வைரஸ் இப்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை, இதன் இரண்டாம் கட்ட அலை மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சீன மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் உச்சம் பெற்றுள்ளது. தற்போது உலகம் முழுக்க கொரோனா காரணமாக 382,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் இதனால் 16,578 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில்தான் பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இத்தாலியில் மட்டும் இந்த வைரஸ் காரணமாக 63,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் இதனால் அங்கு 6077 பேர் பலியாகி உள்ளனர்.

ஆனால் சீனாவில் இந்த வைரஸ் வேகம் குறைந்துள்ளது. அதேபோல் தற்போது இந்த வைரஸ் அங்கு 78 பேருக்கு மட்டும்தான் நேற்று ஏற்பட்டுள்ளது.

அதிலும் 74 பேருக்கு ஸ்டேஜ் 1 வகை பரவல். அதாவது 74 பேர் இதில் வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வந்தவர்கள். மீதம் உள்ள நான்கு பேர்தான் சீனாவை சேர்ந்தவர்கள். இதனால் சீனாவில் அந்த வைரஸ் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் சீனாவில் ஹூபேய் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தடைகளை தளர்த்தி உள்ளனர். அங்கு ஹோட்டல்கள், கடைகள் திறக்கப்பட்டது. முக்கியமாக சில இடங்களில் மால்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. வுஹன் மட்டும்தான் இன்னும் அங்கு திறக்கப்படவில்லை . ஆனால் அதுவும் கூட இன்னும் இரண்டு வாரத்தில் மொத்தமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த செயல் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது. இது பெரிய பிரச்சனையாக முடியும் என்று சீனாவை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனால் சீனாவில் கொரோனாவின் செகண்ட் வேவ் உருவாக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். ஒரு வைரஸ் உருவாகி, அது கட்டுப்படுத்தப்பட்டு பின் அந்த வைரஸ் மீண்டும் தோன்றினால் அதுதான் இரண்டாம் கட்ட அலை.

இரண்டாம் கட்ட அலை என்பது மிகவும் கொடுமையானது. ஆம், முதலில் ஒரு வைரஸ் தோன்றி கட்டுப்படுத்தப்பட்டு, பின் மீண்டும் தோன்றினால் அது முன்பை விட அதிக வேகத்தில் பரவ வாய்ப்புள்ளது.

முன்பை விட வைரஸ் அதிக வீரியமாக இருக்கும். இதனால் பலர் முன்பை விட பலியாக அதிக வாய்ப்புள்ளது. இதைத்தான் இரண்டாம் கட்ட அலை என்று அழைப்பார்கள். இது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் மொத்தமாக கொரோனா அங்கிருந்து நீக்கப்படவில்லை. தற்போதும் அங்கிருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா இருக்கிறது. அதேபோல் இன்னும் 8000 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் சீன அரசு இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அங்கு தடைகளை நீக்கி இருக்கிறது. மொத்தமாக தடைகளை நீக்க முயன்று வருகிறது.

இப்படி மக்களை வெளியே விடுவது மீண்டும் வைரஸ் பரவுவதை அதிகரிக்கும். மீண்டும் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவும். அப்படி நடந்தால் அது பெரிய சிக்கலாக முடியும். அதுதான் இரண்டாம் அலையை உருவாக்கும். ஒரு முறை இரண்டாம் அலை உருவானால் கண்டிப்பாக அதை கட்டுப்படுத்த முடியாது. அது பெரிய சேதங்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.