பயிர்களை நாசம் செய்ய சாரை சாரையாக படையெடுத்து வரும் வெட்டுக் கிளிகளை பாகிஸ்தான் விவசாயிகள் வலை வீசிப் பிடித்து கோழிகளுக்கு தீவனமாக்கி வருகின்றனர்.
25 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெட்டுக் கிளிப் பிரச்சினையை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் சந்தித்துள்ளன.
இந்தியாவில் பெரும் பாதிப்பை இந்த வெட்டுக் கிளி படையெடுப்பு ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் உள்ளிட்ட மேற்கு மற்றும் வட இந்திய மாவட்டங்கள் வெட்டுக் கிளி படையெடுப்பால் கணிசமான பயிர்களை இழந்துள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள விவசாயிகள் வெட்டுக்கிளி பிரச்சினையை வேறு விதமாக கையாள ஆரம்பித்துள்ளனர்.
படையெடுத்து வந்து பயிர்களைக் கொத்தித் தின்னும் வெட்டுக் கிளிகளை வலையை வைத்து வளைத்து வளைத்துப் பிடிக்கின்றனர்.
பின்னர் அவற்றை உள்ளூர் கோழித் தீவன ஆலைகளுக்கு விற்கின்றனர்.
அங்கு அது கோழித் தீவனமாக மாற்றப்படுகிறது. இந்த வெட்டுக் கிளி தீவனத்தை பாகிஸ்தான் கோழிகள் உண்ணுகின்றன.
பாகிஸ்தானின் ஓகரா மாவட்டத்தில் இதை அதிகாரிகள் சோதனை ரீதியாக செய்து பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
வெட்டுக் கிளிகளை கால்நடைத் தீவன மில்களில் கொடுத்து தீவனமாக அரைத்து அதை கோழிகளுக்கு தீவனமாக போடுகின்றனர்.
வெட்டுக் கிளிகளில் நல்ல புரதச் சத்தும் நிரம்பியிருப்பதால் கோழிகளுக்கும் இது ஆரோக்கியமான தீவனமாக மாறியுள்ளது.
இந்த ஐடியாவைக் கொடுத்தது ஓகாரா மாகாணத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி முகம்மது குர்ஷித் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.