விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வு!

hooch tragedy 10 1473517756 1596306808
hooch tragedy 10 1473517756 1596306808

இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாப்பில் கடந்த நாட்களில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக பலர் கைதுசெய்யப்பட்டும் உள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாவட்டங்களில் நடந்த மரணங்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், விஷ சாராய விற்பனையை தடுக்க தவறியமைக்காக 6 பொலிஸ் அதிகாரிகள், 7 கலால்வரி அதிகாரிகளை முதல்வர் அமரீந்தர்சிங் பணி நீக்கம் செய்துள்ளார்.

தார்ன் தரண் மாவட்டத்தில் மட்டும் 63 பேரும், அமிர்தசர் மாவட்டத்தில் 12 பேரும், குருதாஸ்பூரில் 11 பேரும் உயிரிழந்தனர் என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 25 சந்தேக நபர்களும் சாலையோர உணவகங்களுக்கும் பயணிகளுக்கும் கிராம மக்களுக்கும் விஷசாராயத்தை விநியோகம் செய்ததாக பஞ்சாப் மாநில பொலிஸார் கூறியுள்ளனர்.

இறப்புகள் குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், “குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்” என்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.