முதல்வர் பழனிசாமி திறந்து வைத்த 300 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்புச் சிகிச்சை மையம்

1597392993 corona ward 2
1597392993 corona ward 2

புதுக்கோட்டையில் 300 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 25 கோடியில் ஏற்கெனவே கட்டப்பட்ட சிறுநீரக சிறப்புச் சிகிச்சை மையக் கட்டடம் கொரோனா சிறப்புச் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

மூன்று தளங்களில் 300 படுக்கைகள் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு முழுமையான ஆக்ஸிஜன் வசதி, எம் ஆர் ஐ ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வகையான நவீன மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இம்மையத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். புதுக்கோட்டை சிறப்பு மைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி உள்ளிட்டோர் காணொலிக் காட்சியில் இணைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணியார் மருத்துவமனை, பழைய அரசு மருத்துவமனை, சித்த மருத்துவச் சிகிச்சை மையம் மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் ஏற்கெனவே 2,700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.