இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தனித் தமிழ் ஈழமே இதற்கான தீர்வாக அமையும் எனவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து ராமதாஸ் நேற்றைய (வியாழக்கிழமை) தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
“ ஸ்ரீ லங்கா தாயே” எனத் தொடங்கும் தேசிய கீதத்தின் தமிழ் வடிவத்திற்கு இலங்கை அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் மூன்றாவது அட்டவணையில் தமிழ் வடிவ தேசிய கீதம் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது எனத் தெரிவிப்பது இனவெறியை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.