சீன ஆதிக்கத்தைத் தடுக்க தனி ஈழமே ஒரே தீர்வு -சென்னையில் சிவாஜி

Sivaji lingam scaled e1605791458956
Sivaji lingam scaled e1605791458956

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஊடக மையத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக சென்னை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளார். தற்பொழுது இந்திய அரசின் தொடர் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி மறுத்துள்ளார்.

இருப்பினும் அந்தக் கப்பலின் பயணம் தொடர்ந்துள்ளது. அது இலங்கைக்கு வருவதில்தான் தாமதமே தவிர அதன் பயணம் தடைப்படவில்லை.

இலங்கை அரசு தன்னுடைய சர்வதேச நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் உள்ளது. இந்தியாவோடும் இருப்போம் சீனாவோடும் இருப்போம் என்றால் இந்தியா அதற்கு அனுமதிக்காது. எனவே இலங்கை அரசு அவர்களுடைய சர்வதேச நிலைப்பாட்டில் தெளிவடைய வேண்டும். அத்தோடு இலங்கையின் வடகிழக்கில் உள்ள ஈழத்தமிழர்களுக்காக இந்திய அரசு தலையிட்டு அவர்களுக்கென சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

இன்றைய இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அமைதியான அரசியல் தீர்வை காணும் நோக்கத்தில் இந்திய அரசு அவசரமாகவும் உடனடியாகவும் தலையிட்டு சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தலைமை ஏற்கவேண்டும்.

இலங்கையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈழத்தமிழ் மக்களையும் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அவர்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை ஈழத்தமிழகப் பகுதிகளை ஈழத்தமிழர்களே ஆளவும் ஐ.நா. இடைக்கால நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.

சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க தனி ஈழமே தீர்வாகும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில் இலங்கைக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, இந்திய அரசாங்கம் உட்பட சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறோம், என்றார்.