தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும்:ஜெனிவாக் கூட்டத் தொடரில் கஜேந்திரகுமார் வலியுறுத்து!

kajenthirakumar
kajenthirakumar

ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் பேச்சளவில் மட்டும் கையாளும் வரை சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுகின்ற  அனைத்து மக்களும் தொடர்ந்தும் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள்.”என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகன் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் விடயம் 08 இன் கீழான வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் பற்றி நேற்று முன் தினம் (19) நடைபெற்ற பொது விவாத்தில் இணைய வழியில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவரின் உரை வருமாறு:-

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த விடயத்தை நான் இங்கு சமர்ப்பிக்கின்றேன். ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையைப் பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என  வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான செயற்றிட்டம் வெளிப்படுத்துகின்றது.

இலங்கை அரசால் இழைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் மத்தியில், தமிழ்த் தேசமானது  தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காகப் போராடி வருகின்றது. இலங்கை அரசானது வன்முறையைக்  கட்டவிழ்த்தபோது, அதிலிருந்து தம்மைப் பாதுகாக்கவே தமிழர்களும் ஆயுதவழிப் போராட்டத்தைக் கையிலெடுக்க நேர்ந்தது.

2002ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் போர்முனையில் ஏற்பட்ட படைவலுச் சமநிலையே, இதற்கு அடிப்படை காரணமாகும்.

தமிழர் தாயகத்தின் ஏறத்தாழ 75 வீதமான நிலப்பரப்பானது தமிழீழ விடுதலைப புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளும் ஆளுகைக்குள்ளும் இருந்த அப்போதைய களநிலை யதார்த்தத்தின் அடிப்படையில், ஈழத்தமிழரின் தேச அந்தஸ்தும் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு , ஆகக் குறைந்தது இந்த அரசின்  கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு  ஒரு சமஷ்டி ஆட்சி முறைமை உருவாகுமென்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. இதன் மூலமாக ஈற்றில் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால், நடைமுறையில் நிகழ்த்தப்பட்டதோ முற்றிலும் வேறுபட்ட ஒரு நிகழ்வே. இந்த அரசானது, சர்வதேசத்த்தின் பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன், இராணுவ நடவடிக்கையையே தமது தீர்வாக முன்வைத்தது.

அந்த இராணுவ நடவடிக்கையினுடைய விளைவுகளே, இலங்கை அரசு தமிழர்கள் மீது இனப்படுகொலையை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டை தமிழர்கள் முன்வைக்கும் நிலையை உருவாக்கியது.

ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் பேச்சளவில் மட்டும் கையாளும் வரை சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுகின்ற  அனைத்து மக்களும் தொடர்ந்தும் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள் என்பதை இங்கு வெளிப்படுத்திக்கொள்கின்றேன்” – என்றார்.