உயிர்மூச்சை காப்பாற்றிக் கொள்ள கொழும்பிற்கு வாருங்கள் – ஜே.வி.பி

சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி, ‘உயிர்மூச்சை காப்பாற்றிக் கொள்ள கொழும்பிற்கு வாருங்கள்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று திங்கட்கிழமை மாலை 3.30 க்கு இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில்,

இலங்கையில் காணப்படுகின்ற பல முக்கிய காடுகள் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டு பாரிய சூழல் அழிவுகள் இடம்பெறுகின்றன. இன்று சர்வதேச நீர் தினமாகும். இம் முக்கிய தினத்தில் சுற்றாடல் பாதுகாப்பினை வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

கொழும்பு டெக்னிகல் சந்தியிலிருந்து – புறக்கோட்டை வரை பேரணியாகச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் களந்து கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். அத்தோடு நாடளாவிய ரீதியில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். சுற்றாடல் என்பது கட்சிகளுக்கோ அல்லது இனங்களுக்கோ உரித்துடையதல்ல. எனவே சகலரும் இணைந்து அதனைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.