அரசாங்கத்தால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – உதய கம்மன்பில

uthaya kampanpila
uthaya kampanpila

கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியாக கட்டுப்படுத்த முடியாது .

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டாலும் அதை சரியாக பொது மக்கள் பின்பற்ற தயார் இல்லையென்றால் கொவிட் வைரஸ் தாக்கத்தை ஒழிக்க முடியாது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொஸ்கம வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ள போது வாகனங்களைப் பயன்படுத்தவேண்டாமென கூறுவதால் மக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். ஆனால் தமது உயிரின் பெறுமதி ஏனையோரை விட தமக்கே தெரிந்திருக்க வேண்டும்.

எனினும் இவ்வாறானதொரு பயணக் கட்டுப்பாடு தளர்வுகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தொற்றை மேலும் பரவச் செய்யும் வகையில் மிகவும் சொற்பமான பொறுப்பற்ற மக்கள் செயற்படுவதாலேயே சில கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடுகின்றது.

இது ஏனைய மக்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. அந்த பொறுப்பற்ற சொற்பமான மக்கள் ஒழுக்கத்துடன் செய்றபட்டால் ஒட்டுமொத்த மக்களும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கான முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்தும் முன்னுரிமைப் பட்டியலில் கிராம மட்டங்களில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள்,குடும்ப நல அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், விவசாய அதிகாரிகள் இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்தியுள்ளார் என்றார்.