எரிபொருள் விலையேற்றத்தினைத் தொடர்ந்து போக்குவரத்து கட்டணம், பேக்கரி உற்பத்திகளின் விலை மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான விடயங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே சாகர காரியவசம் மற்றும் உதய கம்மன்பில ஊடாக ஊடகங்களில் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவ்வாறான போலியான நாடகங்களை உடன் நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
எரிபொருள் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் இரத்த ஓட்டமாகும். எரிபொருள் ஊடாகவே சகல சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறிருக்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். கொவிட் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்படுவது எவ்வாறு தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும்?
இதேபோன்று முறையற்ற தீர்மானங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அரசாங்கம் சகல துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
அரசாங்கத்தின் போலியான செயற்பாடுகள் தற்போது பகிரங்கமாகியுள்ளது. எனவே தற்போது அவர்களுக்கு காணப்படுகின்ற ஒரே தீர்வு உடனடியாக பதவி விலகி, பொறுத்தமானவர்களிடம் நாட்டை ஒப்படைப்பது மாத்திரமேயாகும் என்றார்.