இலங்கை அகதிகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் – நாமல்

213
213

யுத்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு மீள வருகைத் தரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு தமது தாய் நாட்டில் தமது வாழ்க்கையை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் அவதானம் செலுத்தியமையை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 3,567 குடும்பங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு மீள அழைத்து வந்து, அவர்களுக்கு தேவையான வீடுகளை வழங்கியிருந்தார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.