நாம் அனைவரும் முன்னோக்கி பயணிக்க வேண்டும் – தயாசிறி ஜயசேகர

ஜயசேகர
ஜயசேகர

சுதந்திர கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் எமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க நாம் எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆவார். நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவே உள்ளார். அவ்வாறிருக்கையில் அவரால் எவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து புதிய அரசியல் பயணத்தை தொடர முடியும்?

ஆனால் அவருக்கு சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியும். அதே போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் இணைத்துக் கொண்டு, எமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

எனவே யாரையும் கட்சியிலிருந்து நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை. சகலரையும் இணைத்துக் கொள்வதிலேயே அவதானம் செலுத்தியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் அனைவரும் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றார்.