ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வுகளைப் பிற்போட்டிருப்பது சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க

Tissa Attanayake
Tissa Attanayake

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதிவரை பிற்போடுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகள் பாதிப்படையும்.

அதுமாத்திரமன்றி கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான இரகசிய ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்துக்கள் வெளியாவதைத் தடுப்பதற்காக ஜனாதிபதி தனது நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளை மட்டுப்படுத்தியிருக்கின்றாரா? என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது. 

ஆகவே நாடாளுமன்ற அமர்வுகள் பிற்போடப்பட்டமைக்கான உண்மைக்காரணம் குறித்து ஜனாதிபதி நாட்டுமக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதியினால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகளைப் பிற்போடுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளபோதிலும், விசேட சந்தர்ப்பங்களின்போது மாத்திரமே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

குறிப்பாக நாடாளுமன்ற அமர்வுகளைப் பிற்போடுவதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவாறான காரணங்கள் எதனையும் கூறாமல், ஜனாதிபதியினால் சடுதியாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமையானது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. 

2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

அவ்வாறிருக்கையில் நாடாளுமன்ற அமர்வுகளை ஜனவரி மாதம் 18 ஆம் திகதிவரை பிற்போட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான காரணம் என்ன?

இவ்வாறு பிற்போடப்படுவதன் விளைவாக நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கள், கோப் குழு உள்ளடங்கலாக அனைத்தினது நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச்செல்வதில் காலதாமதம் ஏற்படும். ஆகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களினால் அரசாங்கத்திற்கு ஏதேனும் அழுத்தங்கள் ஏற்பட்டதா? அல்லது அவற்றின் செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு விரோதமானவையாக அமைந்ததா? என்பது குறித்து எமக்குத் தெரியாது. 

இருப்பினும் கடந்த காலங்களில் அரச நிதி பற்றிய குழு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக அமைந்தன. குறிப்பாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்மோசடிகள் குறித்துத் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அதற்கெதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. 

ஆனால் தற்போது நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ள நிலையில் அவையனைத்தும் வலுவிழப்பதுடன் மீண்டும் முதலிலிருந்து அவற்றை ஆரம்பிக்கவேண்டிய நிலையேற்படும். எனவே நாடாளுமன்ற அமர்வுகள் பிற்போடப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி நாட்டுமக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.

அடுத்ததாக தற்போது நாடு மிகப்பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. நாட்டின் வெளிநாட்டு இருப்பு 1.4 பில்லியன் டொலர்களை விடவும் குறைவடைந்திருப்பதுடன் அது எமக்கு இருவாரங்களுக்குக்கூடப் போதுமானதல்ல. 

மறுபுறம் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பதன் விளைவாக மக்களின் வாழ்க்கைச்செலவு சடுதியாக உயர்வடைந்து அவர்களைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. இப்போது சர்வதேச நாணய நிதியத்தைநாடி, நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

அடுத்ததாக நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் பதிவாகி, மக்கள் அச்சத்திற்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் அரசாங்கம் இன்னமும் அதற்குரிய தீர்வை வழங்கவில்லை. இதற்கு மத்தியில் இப்போது திரவ உரம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கொள்கலன்களும் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றது. 

ஆனால் ஜனாதிபதி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதை விடுத்து, தனது நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளை மட்டுப்படுத்த முனைவது வலுவான சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. 

குறிப்பாக கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கை குறித்த தகவல்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளியாகியிருந்ததுடன் அதுபற்றி பல்வேறு வாத, பிரதிவாதங்களும் இடம்பெற்றன. இது அரசாங்கத்திற்குப் பாரிய சவாலாக மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பலை உருவாவதைத் தடுப்பதற்காகவா இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவ்வாறான ஏகாதிபத்தியவாத நிர்வாகத்திற்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.