வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் நாள் வியாபாரிகள் எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டியில், அன்பார்ந்த தமிழீழ மக்களே! 2009 ஆண்டிற்கு பின்னர் ஒவ்வொரு மாவீரர் நாளும் மாவீரர்கள் பெயரில் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு நல்ல உதாரணமாக இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வைப் பார்ப்போம்.
கடந்த மாதம் தொடக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று மாவீரர் நாளுக்காக பணம் சேகரித்தார். மேலும் லண்டனில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சில கோடிகளை இவ்வருட மாவீரர் நாள் நிகழ்விற்காக அனுப்பி வைத்துள்ளது.
இந்த பணத்திற்கான கணக்குகளை இவர்கள் யாருக்கும் தெரிவிப்பதில்லை. சிறிய தொகையை செலவழித்து விட்டு மிகுதி பணத்தை தமது சொந்த தேவைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை. கஜேந்திரனும், சிறீதரனும் இவ்வாறான நிகழ்வுகளை சாட்டி புலம்பெயர் மக்களின் பணத்தினை கொள்ளையடிப்பதே இவர்களின் வியாபாரமாக உள்ளது. என சுவரொட்டியில் காணப்படுவதுடன்,
சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் மக்களில் ஒருவன் 27 கார்த்திகை 2022 என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டி வவுனியா நகரின் வைரவபுளியங்குளம் வீதி , புகையிரத நிலைய வீதி , நூலக வீதி , நகரசபை வீதி என பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன