மதுரையுடன் ஏனைய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கா? தமிழக முதல்வர் ஆலோசனை

eps 2
eps 2

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இன்று (புதன்கிழமை)  காலை 10 மணிக்கு அவர் இவ்வாறு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை இந்த தொற்றுக்கு இலக்காகி 794 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 62,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் மதுரை மாவட்டத்துக்கும் நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அதேநேரம் தேனி மாவட்டத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.