உலகிற்கு விடை கொடுத்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்து விட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பி.க்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை சற்று முன்னர் அறிவித்துள்ளது.

பாடும் நிலாவின் உயிர் மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்துள்ளமையானது அனைவரையும் பெரும் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.