தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் – தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் மீண்டும் வலியுறுத்தல்

C.V.Vickneshwaran
C.V.Vickneshwaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாமென தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கனகசபாவதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே
க . வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் கோரிக்கையை வரவேற்கின்றேன்.

முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன். அவர் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அல்ல. ஆனால் அவரை நாடாளுமன்றத்தில் அமர்த்தியுள்ளனர்.

அவர் கூறுவது அரசாங்கத்தின் கோரிக்கையாகவும் இருக்க கூடும். பல வருடங்களாக சிறையில் வாழுகின்றவர்களை விடுதலை செய்து தமிழர்களின் மனங்களை தங்களது பக்கம் திருப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இத்தனை வருடங்களாக சிறையில் வாழ்க்கையை கழித்த தமிழ் உறவுகள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த அரசாங்கம் நிச்சயம் எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

மேலும், சிறைக்கைதிகளின் விடுதலையை அரசியல் மயமாக்கியமையால் தான் இதுவரைகாலமும் எந்ததொரு நன்மையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .