விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கம்!!

swiss federal court
swiss federal court

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிசர்லாந்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது,

இதனை அந்த நாட்டு சமஷ்டி நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல. சமஷ்டி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதுடன் இது சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்ட 12 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டமையும் சமஷ்டி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

1999ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுவிசர்லாந்தின் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 260ஆவது சரத்தை மீறி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 12 பேருக்கு எதிராக சுவிசர்லாந்து சட்ட மா அதிபர் அலுவலகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்து. இது குற்றவியல் அமைப்பு ஒன்று உதவும் நடவடிக்கை என சுவிசர்லாந்து சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.

குற்றவியல் நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது தீர்ப்பை வழங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று தீர்பளித்த நீதிமன்றம், 12 சந்தேகநபர்களையும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து விடுதலை செய்தது.

இந்த நிலையில் குற்றவியல் நீதிமன்றின் தீர்ப்பை சுவிசர்லாந்து சட்ட மா அதிபர் அலுவலகம் சமஷ்டி நீதிமன்றில் கடந்த ஏப்ரல் மாதம் மேன்முறையீடு செய்தது.

“12 சந்தேகநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான சட்டம் மாபியா போன்ற திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம், இந்த சட்டம் அல் – கைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் கையாளப்பட்டது.

இந்தக் குற்றம் நிகழ்ந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பாக கருதப்படவில்லை” என்று சமஷ்டி நீதிமன்றம் தனது தீர்ப்பில் கோடிட்டுக்காட்டியது.

அந்த அமைப்பு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி இருந்தாலும் தனியான ஆட்சி அதிகாரத்தை பெறுவது தமது சமூகத்தை சுயாதீனமான சமூகமாக அங்கீகரிக்க கோரியே ஆயுதப் போராட்டத்தை நடத்தியது என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

குற்றவியல் நீதிமன்றம் சந்தேக நபர்களில் 5 பேருக்கு எதிராக வர்த்தக ரீதியான மோசடி மற்றும் இருவருக்கு எதிராக போலி ஆவணங்களை தயார் செய்தமை தொடர்பாக சிறைத்தண்டனை விதித்திருந்தது. 11 முதல் 24 மாதங்கள் வரை இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் சமஷ்டி நீதிமன்றம் சுவிசர்லாந்து சட்ட மா அதிபர் அலுவலகத்தின் ஒரு மேன்முறையீட்டை அனுமதித்துள்ளது. குற்றவியல் நீதிமன்றம் விடுதலை செய்த ஒரு தரப்பினர் போலி ஆவணங்களை தயார் செய்தனரா என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்ற அந்தக் கோரிக்கையை சமஷ்டி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.