உக்ரைன் விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல் – ஈரான் மறுப்பு

ukrain1
ukrain1

உக்ரைன் விமானம் ஈரானிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த விமானத்திலிருந்த 176 பயணிகளும் உயிரிழந்தனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

உலகளாவிய விமான போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகிறது.

விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.

மேலும், உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அதேபோல், அமெரிக்காவும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஈரான், எதிர்பாராத விதமாக விமானத்தை சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என்று அமெரிக்கா அதிகாரிகள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

ஆனால், கனடா மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான அதே சமயத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் பல, அதே வான்பரப்பில் பறந்ததாகவும் கூறியுள்ளது. கனடா தன்னிடம் உள்ள உளவுத்தகவல்களை அளித்து விமான விபத்து குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரான் கேட்டுக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.