கிம் ஜொங்-உன்னுடன் இன்று பேசவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!

7es
7es

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்துக்குச் செல்லவிருப்பதாகவும், அப்போது கிம் ஜொங் உன் உட்பட உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடல்நலக்குறைவால் பாதிப்பட்டதாகவும், சில ஊடகங்களில் மரணித்துவிட்டதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிம் ஜொங் உன் நலமுடன் இருப்பதாகத் தென்கொரியா ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், தொழிலாளர் நாளில் புதிய உரத்தொழிற்சாலையை அவர் திறந்து வைத்த ஒளிப்படம் வெளியாகியிருந்தது.

கிம், இருபது நாட்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றி தன்மீதான தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதற்கு முன்னர், கிம் குறித்த தகவல் வெளியாகாத நிலையில் சில புலனாய்வுத் தகவலை வைத்து, கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கிம் ஜொங் உன் பொது வெளியில் தோன்றியுள்ளதால் அவருடன் பேசவுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.