ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசையை முறுக்கு’ படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஆனந்த். இவர் தற்போது, ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இது தொடர்பாக இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் ஆனந்த் பேசுகையில், “நட்பு என்பது மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, அது நிபந்தனையற்ற பந்தம். ஒவ்வொருவரிடமும், குறிப்பாக பதின்ம பருவத்தினரிடையே நேர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இதனால் படத்தின் டைட்டிலுடன் ‘வாழ்வின் பகுதி’ என்று டேக்லைனில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்தப் படம் ஒவ்வொருவரையும் நட்பை நினைக்கச் செய்து மகிழ்ச்சியூட்டும்” என்றார்.
இந்த படத்தில் குமாரவேல், டயானா வைஷாலினி, லீலா, ஆனந்த், பவானிஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், பூர்னேஷ், வில்ஸ்பட், இஃப்ரான், சபரீஷ், ஆர்.ஜே.ஆனந்தி, மோனிகா சின்ன கோட்லா, கே.பி.ஒய்.பாலா, குஹன், ஃபென்னி ஆலிவர், டி.எஸ்.ஆர்., வினோத், பூவேந்தன் மற்றும் சாய் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஏ.எச்.காஷிஃப் இசையமைக்க, தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகராக அறிமுகமாகி, தன்னுடைய திறமையை பதிக்க நடிகர் ஆனந்த் எடுத்திருக்கும் முயற்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவியது போல் ரசிகர்களும் ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.