இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் மின்னல் தாக்கியத்தில் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த அனர்த்தத்தின் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் லக்ஷ்மேஷ்வர் ராய் தெரிவித்துள்ளார்.
குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இதேவேளை பீகார், அசாம், மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.