இந்தோனேசியாவில் தனது தாயின் வைத்திய செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் வென்றதும், அவர் பாடுவதை தொலைக்காட்சியில் பார்த்தப்படியே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் லிகா தங்தத் என்ற பாடல் போட்டி நடந்தது. இதில் வென்றவர்களுக்கு 28,000 யூரோ பரிசாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அறிந்த ஜன்னா என்ற 14 வயது சிறுமி ஒருவர், உயிருக்குப் போராடும் தனது தாயின் வைத்திய செலவுக்காக போட்டியில் பங்கேற்றார்.
இதில் தாயை நினைத்து உருக்கமாகப் பாடி அனைவரையும் அசத்தினார். அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற ஜன்னா அதில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதியானார்.
அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதியான தகவல் மேடையில் அறிவிக்கப்பட்ட போது, இந்த மகிழ்ச்சியான தகவலை தனது தாயிடம் தொலைபேசியில் சொல்ல ஜன்னா விரும்பினார்.
அப்போது, அவரது பாடலை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே ஜன்னாவின் தாய் உயிரிழந்ததாக அவரது உறவினர் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட அந்தச் சிறுமி மேடையிலேயே கதறி அழுதார். நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் இது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.