‘தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்’ அங்குரார்ப்பணம்

DSC0177
DSC0177

வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொருளாதார, சமூக அபிவிருத்திக்கான மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் “தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்” அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று (25) நடந்த கலந்துரையாடலில் வைத்தே குறித்த மன்றம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் ஆகியோரின் தலைமையில் குறித்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெறுகிறது. அதேவேளை, யுத்தத்தினால் மிக மோசமாக பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சமாந்திரமாக முன்னெடுத்து செல்வதற்கு சிவில் சமூகத்தின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்ததன் பின்னணியிலேயே இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும் வடக்கு, கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிக்கும் வகையில் இன்னமும் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக, இளையோர் வலுவூட்டல், வறுமை ஒழிப்பு, விவசாயம், மீன்பிடி, திறன் விருத்தி, பொருளாதார வலுவூட்டல், கல்வி, சுற்றாடல், நல் ஆட்சி, சுகாதாரம், விஞ்ஞானமும் புதுமை படைத்தலும், தகவல் தொழில்நுட்பம், சட்ட உரிமைகள், தமிழர் மரபு, பல்துறை ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் துறைசார் வல்லுநர்களை அடையாளம் கண்டு வளங்களை சரியான முறையில் ஒன்றுதிரட்டி சரியான திசையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக துடிப்பும் செயற்திறனும் மிக்க சிவில் சமூக குழு ஒன்றின் தேவை இதற்கு அவசியமாக இருக்கின்றது.

இந்த அவசியத்தை கவனத்தில் எடுத்தே எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை ஆராயும் பொருட்டு இன்றைய கூட்டம் நடைபெற்றிருந்தது.

அறிவு, ஆய்வு மற்றும் செயற்திட்டங்களின் வினைத்திறன்மிக்க முகாமைத்துவத்தின் ஊடாகவும் மற்றும் வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் மற்றும் வளங்களை பயன்படுத்தி தமிழர்களின் செழிப்பு மற்றும் வலுவூட்டலுக்காக மன்றம் ஒன்றை ஸ்தாபித்து செயற்படுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ் ஆயர் ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் மற்றும் நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் தலைமையில் வடக்கு கிழக்கை சேர்ந்த 50 க்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் புலமையாளர்கள் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளனர்.