நடிகர் சிம்பு தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும் மதத்தின் மேல் பெரிய நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராகி வருகிறது. நேற்று இந்த படத்தின் டீசரை இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் மொழிகளில் வெளியிட்டனர்.
நேற்று வெளியான இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதுகுறித்து அவர் இந்து நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் தனக்கு மதங்களின் பேரில் பெரிய நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார். அதில் ‘எனக்கு ஆண்மீகத்தில் ஈடுபாடு உண்டு என்பதும் சிவன்தான் பிடித்த கடவுள் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் எனக்கு மதங்களின் மேல் நம்பிக்கை இல்லை. எல்லாக்கடவுள்களையும் ஒன்றாகவே நினைக்கிறேன். இஸ்லாமியர்களின் மேல் இருக்கும் பொதுப்பார்வைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தேன். அது மாநாடு படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.