அரச மரம் புத்தருக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியம் – கோவிந்தன் கருணாகரம்

DSC04588 720x450 1
DSC04588 720x450 1

அரச மரம் புத்தருக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியம். அதனால்தான் குருந்தூர் மலையில் சிவலிங்கம் தோன்றியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில்.

ஜனாதிபதியினால் தொல்பொருள் ஆராய்ச்சிக்கென செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறித்த செயலணி வடக்கில் குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சி நடத்தியபோது சிவலிங்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை தாரா லிங்கம் என வரலாற்றாசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குருந்தமரம் இருந்த அந்த குருந்த மலையிலே சிவபெருமானின் ஆலயம்தான் கிடைக்கும். ஏனென்றால், குருந்தமரம் சிவபெருமானுக்கு மிகவும் வேண்டியதொரு மரம். எங்கெங்கெல்லாம் அரச மரம் இருக்கிறதோ அங்கங்கெல்லாம் நீங்கள் புத்தர் சிலையை வைக்கின்றீர்கள். அரச மரம் எந்தளவுக்கு புத்த பெருமானுடன் தொடர்புபட்டதோ, அவருக்கு முக்கியமானதோ அதே போன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியமானது.

குருந்தமர நிழலில் இருந்துதான் சிவபெருமான் மாணிக்கவாசகரை ஆட்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அதேபோன்று வெடுக்குமாரி, குசேனார் மலை, பங்குடாவெளி, கிண்ணியா போன்ற இந்துக்களுக்கு சொந்தமான இடங்கள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற ரீதியில் அபகரிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.