மனித உரிமை மீறப்பட்டால் இலங்கைக்குள் அதன் தீர்விற்கான பொறிமுறை மிகவும் வலுவூட்டப்பட்டால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வெளிநாட்டு தூதர அலுவலகங்கள், வெளிநாட்டு அரச சார்பற்றோர் எமது நாட்டில் தலையீடுகளை மேற்கொள்ள முடியாது என்று நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா தெரிவித்தார்.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தொடர்பான அறிக்கைகளை நாம் முறையாக தயாரிக்கவில்லை. மாவட்ட நீதிமன்ற ஆவணங்களை கவனத்தில் கொண்டால் எத்தனை வழக்குகள் உள்ளது என்பதை கூட எம்மால் அறியமுடியாதுள்ளது. இந்த நிலை மிகவும் மோசமானதாகும்.
நீதி மன்றங்களில் உள்ள வழக்கறிக்கைகளை முறையாக வகுத்து அறிக்கையிடுவதற்கு நீதிமன்ற கட்டமைப்பை நவீன மயப்படுத்துவது மிக முக்கியமானதாகும். அதற்கமைய நீதிமன்ற கட்டமைப்பினை புதிய தொழில்நுட்பத்திற்கு அமைவாக கட்டியெழுப்புவதே எமது முக்கிய பணியாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதற்கான திட்டத்தை எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் நாம் முன்னெடுப்போம்.
நீதிமன்ற வழக்குகள் தாமதமடைவதனை தடுக்கின்ற வகையில் நீதிமன்றங்களில் இரசாயன ஆய்வு அறிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை அனுபவிப்போர் மிகமோசமான குற்றம் செய்த கைதிகளுடன் அடைக்கப்படுவதனால் இவர்களும் மோசமான குற்றம் செய்தவர்களுடன் நட்புறவு கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. இதன் காரணமாக இந்த சிறைச்சாலை முறைமையை மறுசீரமைப்பது முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.