அரச இயந்திரத்தால் ஒருமித்தநாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவும் இலங்கை இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக கிளிநொச்சி காவல்துறையினரால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து வாக்கு மூலம் பெறப்பட்டது. குறித்த வாக்கு மூலத்தில் காவல்துறையினரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே தமிழர்களின் முப்படைகளால் காணிகள் வன்பறிப்பு செய்யப்பட்டிருக்கிறது தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலும் வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போனறவை ஊடாக காணிகள் சுவீகரிப்பு செய்யப்படுகிறது. இலங்கையில் பௌத்த விகாரைக்காக காணிகள் உறுதியோடு வழங்கப்படுகிறது ஆலயங்களுக்கு குத்தகை முறையிலேதான் வழங்கப்படுகிறது. முப்படையினரினை பயன்படுத்தி ஒரு தேசமாக இலங்கையை ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறார்களே தவிர மனதளவில் இரண்டு நாடாகவே இருக்கிறது. அந்த வகையில் தான் அரசும் செயற்படுகிறது.
இந்த போராட்டம் கூட இந்த நாட்டிலே தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவே இடம்பெற்றது. குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கான அழைப்பு எமக்கு எவராலும் தனித்து விடப்படவில்லை எனவும் தாம் பத்திரிகையில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்தே இந்த பேரணியில் கலந்து கொண்டதாகவும் நாம் இந்த ஆர்ப்பாட்டத்தினை நாம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலோ இலங்கை இறையாண்மைக்கு எதிராகவோ ஆயுதவழியிலோ போராடவில்லை எனவும் அரச இயந்திரங்களால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்காகவும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவுமே அமைதிவழியில் இந்த போராட்டம் நடாத்தபட்டது.
சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் வராத கொரோனா தமிழர்கள் நடத்தும் போராட்டத்திலா வருமா எனவும் காவல்துறையினரிடம் தனது வாக்கு மூலத்தில் கேள்வி எழுப்பினார் . சுமார் 1.30 மணித்தியாலங்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் காவல்துறையினர் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டனர்