மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாக பலர் இறக்கின்றனர். எனவே குறித்த வைத்தயசாலையினை ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து வைத்தியர்களின் இவ்வாறான அசமந்த போக்குகளை இல்லாதொழிக்குமாறு ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் உரிய ஒரேயொரு போதனா வைத்தியசாலையாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை காணப்படுகிறது.
இங்கு வைத்திய வசதிகள் உயர் நிலையில் காணப்பட்ட போதும் அங்கு காணப்படும் வைத்தியர்களின் அசமந்த போக்குகள் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச மருத்துவ சேவை பெற வருகின்ற நோயாளர்கள் மீதான அலட்சியப் போக்குகள் போன்றவற்றால் கடந்த ஆறு மாதங்களுக்குள் 10க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
பெரும்பாலான வைத்தியர்கள் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் நேரத்தை விட கூடுதலான நேரத்தை தனியார் வைத்திய நிலையங்களில் செலவிடுகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதனால் இலவச மருத்துவ உதவி பெற அரச வைத்திய சாலைக்கு வரும் மக்களுக்கு அவசர அவசரமாக அரைகுறையாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதோடு தவறான சிகிச்சைகள் வழங்கப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பு வைத்தியசாலையை தங்கள் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து வைத்தியர்களின் இவ்வாறான அசமந்த போக்கு களை இல்லாதொழித்து அப்பாவி மக்களின் உயிர்களைக்காக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இனிவரும் காலங்களில் அரச வைத்தியர்கள் தனியார் வைத்திய நிலையங்களில் கடமையாற்றுவதை தடுத்து மனித உயிர்களை காப்பாற்றுமாறு சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.