45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தவர்: எஸ்பிபி குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

samayam tamil 2
samayam tamil 2

‘அண்ணாத்த’ படத்திலிருந்து வெளியாகியுள்ள எஸ்பிபி பாடிய பாடல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

‘அண்ணாத்த’ படத்தை இந்த ஆண்டு பொங்கலுக்கே வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த இயலவில்லை. இதனால் உஷாரான படக்குழுவினர் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாகவே படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டனர். அதனை தொடர்ந்து அண்மையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. டி. இமான் இசையில் எஸ்பிபி பாடியுள்ள இந்தப்பாடல் படத்தில் முதல் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் “எஸ்பிபி எனக்கு பாடும் கடைசி பாடல் இதுதான் என நான் கனவில் கூட நினைக்கவில்லை” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

‘அண்ணாத்த’ படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா தன்னுடைய பாணியில் குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு படமாக இந்தப்படப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் முதல்காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.