யாழ்ப்பாணம் – காக்கை தீவு வீதி, வசந்தபுரம் பகுதி மக்கள் இன்று காலை(07) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
காக்கைதீவு, அராலி வீதியில் நீண்ட காலமாக மிருக கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு தெரியப்படுத்தியும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது யாழ்ப்பாண மாநகரசபையின் கழிவகற்றும் உழவு இயந்திரங்கள் அனைத்தும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன்போது அவ்விடத்திற்கு வந்த யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் பொறியியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இவ்வாறு போடப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுவதாகவும், அவ்விடத்தில் உடனடியாக கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதாகவும் உறுதி அளித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.