இந்திய-சீன இராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 15 மணி நேரம் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து அரசின் உயர்மட்ட சீன விவகார குழுவினர் டெல்லியில் கூடி 2 மணி நேரம் விவாதித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்திய-சீன எல்லை பேச்சுவார்த்தை பிரதிநிதியுமான அஜித் தோவல், மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தலைவர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
பாங்கோங் ஏரி மற்றும் ரோந்து மையம் 15இல் இருந்து துருப்புக்களை முழுவதுமாக மீளப் பெறுவதற்கான காலக்கெடுவை நிச்சயிப்பது குறித்து இரு தரப்பு உயர் அதிகாரிகளும் முடிவு செய்துள்ளதையும் அதேநேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிங்கர் 4 பகுதியில் ஓரளவு படைகளை நிறுத்தி வைப்பதை பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையே சாந்தமான நிலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் ஏப்ரல் 20ஆம் திகதியில் இருந்த பழைய நிலைமைக்கு சீன இராணுவம் பின்வாங்கும் எனவும் உயர்மட்ட குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.