சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணத்துக்கான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் விமான சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையில் ஈடுபடும் 55 ஆவது நகரமாகவும் முதலாவது அனைத்துலக சேவையாகவும் யாழ்ப்பாணத்துக்கான சேவை அமையவுள்ளது.
இந்த சேவை ஆரம்பிக்கப்படுவது பெருமைமிக்க ஒரு தருணமாகும்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் சுப்பையா, சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் முதலாவது தொடர் விமான சேவையாக இது இருக்கும் என கூறினார்.