கடற்படை முகாமிற்கு தனியார் காணிகளை சுவீகரிக்க முற்பட்டதை எதிர்த்து போராட்டம்

IMG20200820093139
IMG20200820093139

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினர் இன்று வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை நில அளவைத் திணைக்களத்தினர் கடற்படையினருக்கு அளப்பதற்கு இன்று வருகை தந்திருந்தனர்.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நில அளவைப் பணியை கைவிட்டு விட்டு திரும்பி சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.குறித்த மக்களின் போராட்டத்தின் போது ஏராளமான பொலிஸாரும் கடற்படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இவ் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றிய பொலிஸார் குறித்த காணி உரிமையாளரை அழைத்து பேசியிருந்தனர். காணி உரிமையாளர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கனகரட்னம் சுகாஷ் சென்று கடற்படை மற்றும் பொலிஸாருடன் பேசியிருந்தார். 
இதன் போது காணி உரிமையாளர்கள் காணியை வழங்க மறுத்த நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இதன் பின்னர் சுகாஸ் மற்றும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் அப் பகுதி பிரதேச சபை உறுப்பினரும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர்.

மேலும் காணி உரிமையாளர்களுடன் கடற்படையினரும் பொலிஸாரும் நடாத்திய பேச்சுக்களின் போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

IMG 20200820 WA0028
IMG 20200820 WA0028