விக்னேஸ்வரனுக்குப் பக்கபலமாக இருப்பேன் – முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன்

denis wigneshwaran
denis wigneshwaran

‘இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத  ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச்  சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த  ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்’ என முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக  சட்டத்தரணி டெனீஸ்வரன் தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதிர்வரும் புதன் கிழமை விசாரணைக்கு வருகின்றது. அண்மைய விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரைகளின் எதிரொலியாக , இந்த வழக்கு தமிழ் மக்களை அச்சம்கொள்ளவைத்துள்ளது.

இவ்வழக்கால் நாடாளுமன்ற உறுப்பினரான விக்னேஸ்வரனின்  அரசியற் செயற்பாட்டுக்கு தடைகள் ஏற்படாமல் இருப்பதற்காக இவ்வழக்கைத் தொடுத்திருந்த டெனீஸ்வரன் அவர்கள் வழக்கை வாபஸ்பெறவேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் ஒரு அங்கமாக சட்டத்தரணி குருபரன் அவர்கள் விடுத்த வேண்டுகோள் ஒன்றுக்கு பதிலளிக்கும்போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பேன் என சட்டத்தரணி டெனீஸ்வரன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொலைபேசியில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களைத் தொடர்புகொண்ட டெனீஸ்வரன் தான் இந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளதாக டெனீஸ்வரன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.