மண்முனை பாலத்தில் பயணிகளுக்கு ஆபத்து- செப்பனிடுமாறு மக்கள் கோரிக்கை

manmunai
manmunai

மண்முனை பாலத்தின் வீதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்னமும் நிறைவு செய்யப்படாத நிலையில் உள்ளமையினால் மழைக் காலத்தில் போக்குவரத்தின் போது பயணிகள் விபத்துக்களை எதிர்கொள்ள வேண்டி நேரிடுகின்றமையினால் அதனை செப்பனிட்டு தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மழை காலங்களில் குறித்த பகுதியில் 3 அடிக்கு மேல் நீர் பாய்ந்து செல்கின்றமை வழமையான தொன்று. இந்நிலையில் வீதியின் அரைப் பகுதிக்கு கொங்கிறீட் இடப்பட்டும், மீதியான அரைப்பகுதிக்கு கொங்கிறீட் இடப்படாமலும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக மழை காலங்களில் நீர் வீதிக்கு மேலால் பாய்கின்ற போது பள்ளம், மேடுகளை இனங்காண முடியாத நிலையேற்படும். இதனால் போக்குவரத்தின் போது வாகனங்கள் சறுக்கி விழுவதற்கும், பயணிகள் விழுந்து விபத்துக்களுக்கு உள்ளாவதற்கும், நீரில் அடித்துச் செல்லப் படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மேற்கு பகுதிக்கு செல்கின்ற அதிகளவான மக்கள் இவ்வீதியின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் இவ்வீதி திருத்தப்பணிகள் நிறைவுறாதுள்ளமை வேதனையளிப்பதாக மக்கள் கூறுகின்றனர். மேலும், குறித்த வீதியை உடனடியாக செப்பனிட்டு, பயணிகள் அச்சமின்றி செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுகின்றனர்.