திரைத்துறையில் இருந்து விலகிய நடிகை!

திரைத்துறையிலிருந்து விலகி மனித குலத்துக்குச் சேவை செய்யவுள்ளதாக பிரபல நடிகை சனா கான் கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த சனா கான், 2005 முதல் நடித்து வருகிறார். தமிழில் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்தார். தம்பிக்கு இந்த ஊரு, பயணம் ஆயிரம் விளக்கு, தலைவன், அயோக்யா போன்ற தமிழ்ப் படங்களிலும் பல ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.

இந்நிலையில் திரைத்துறையிலிருந்து விலகுவதாக சனா கான் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

இந்த உலகுக்கு மனிதன் வந்ததற்குக் காரணம் பணத்தையும் புகழையும் தேடி ஓடுவதற்காகத்தானா? உதவி வேண்டுவோருக்காகப் பணி செய்வது மனிதனின் வாழ்க்கையில் ஒரு கடமையல்லவா! ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதை அவன் எண்ணக்கூடாதா? அவன் இறந்த பிறகு என்ன ஆகும்? இந்த இரு கேள்விகளுக்குமான விடையை நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன்.

இரண்டாவது கேள்வி. நான் இறந்த பிறகு எனக்கு என்ன ஆகும்?

எனது மதத்தில் இதற்கான விடையைத் தேடியபோது, உலகின் இந்த வாழ்க்கையே இறப்புக்குப் பிறகான சிறப்பாக வாழ்க்கைக்கு உரியதாகும் என்பதை உணர்ந்தேன். நம்மைப் படைத்தவரின் கட்டளைக்கு ஏற்ப பணமும் புகழையும் தேடுவதே ஒரே குறிக்கோளாக இல்லாமல், பாவப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து, மனித குலத்துக்குச் சேவை புரியவேண்டும்.

படைத்தவர் நமக்கு அளித்த பாதையில் செல்லவேண்டும். எனவே இன்றுமுதல் திரைத்துறையிலிருந்து விலகியுள்ளேன். இனிமேல் மனிதர்களுக்குச் சேவை புரியவுள்ளேன். படைத்தவரின் கட்டளைகளைப் பின்பற்றப் போகிறேன். எனவே திரைத்துறை தொடர்பாக இனிமேல் யாரும் என்னிடம் ஆலோசிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்த திரைத்துறை தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் சனா கான் நீக்கியுள்ளார்.