வடமாகாணத்தில் இடம்பெறும் மரக்கடத்தல் மற்றும் சட்ட விரோதசெயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் மரக்கடத்தல்காரர்களின் அச்சுறுத்தல் செயற்பாடுகளையும் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்கமுடியாது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஊடவியலாளர்கள் கடந்த (12) செவ்வாய்க்கிழமை மரக்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டமைக்கு, எதிர்ப்புத்தெரிவித்து ((15.10.2020) வியாழக்கிழமை வடக்கு ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், மாவட்ட வன அதிகாரிக்கும் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர், இதன்போது அவ் ஆர்பாட்டத்தில் ஊடவியலாளர்களுடன் கலந்துகொண்ட ரவிகரன் வனஅதிகாரியுடன் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இயங்கவேண்டியவர்கள். அவர்களை மரக்கடத்தல்காரர்கள் இவ்வாறு கடுமையாகத் தாக்கியுளார்கள். இதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்கள் மரங்களை பாரிய அளவில் நாட்டினார்கள். தற்போது மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டுக் கடத்தப்படுகின்றது.
எனவே தாங்கள் பொறுப்பு வாய்ந்த வனத் திணைக்களம் என்றவகையில் இவ்வாறான மரக்கடத்தல் சம்பவங்களை, நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.