கொரோனாவால் படப்பிடிப்பு இல்லை- ஆட்டோ ஓடும் நடிகை!

manchu
manchu

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றால், இந்த உலகமும், நாமும் அடுக்கடுக்கான சவால்களை அனுதினமும் சந்தித்து வருகிறோம். பலருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. 
 கேரளாவில் மஞ்சு என்ற நாடக நடிகையின் வாழ்க்கையையும் கொரோனா வைரஸ் தொற்று புரட்டிப்போட்டிருக்கிறது.

நடிகை மஞ்சுவுக்கு 15 ஆண்டுகளாக சோறு போட்டுக்கொண்டிருந்தது மேடை நாடகங்கள்தான். தனது சேமிப்பையும் கேரள மக்களின் கலைக்கழகத்திடம் கடன்பெற்றும் ஒரு ஆட்டோவை வாங்கினார். அந்த ஆட்டோ அவர் நாடகம் முடிந்து வீட்டுக்கு திரும்புவதில் வழித்துணைவனாக மாறிப்போனது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மாதக்கணக்கில் ஊரடங்கு போடப்பட, மேடை நாடக அரங்கேற்றங்கள் நடைபெற வழியற்றுப்போனது. இதனால் தனது கையில் இருக்கிற ஆட்டோவையே வாழ்வாதார சாதனமாக மாற்றினார். ஆமாம். இப்போது அவர் ஆட்டோ ஓட்டி தனது வாழ்வாதாரத்தை சம்பாதித்துக்கொள்கிறார்.

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி விடாமல் நெஞ்சில் துணிவுடன் ஆட்டோ ஓட்டி வாழ்வில் புதிய பாதையை போட்டுள்ள நடிகை மஞ்சுவை அந்தப் பகுதியில் பாராட்டாதோர் யாருமில்லை.