பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் சமர்ப்பித்தது என்ன ?

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 8

பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வின்போது “தமிழ் மக்களே இலங்கையின் முதல் குடிகள்” என்ற தனது கருத்துக்கு ஆதராமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சரித்திரப் பேராசிரியர் மற்றும் யாழ் பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் தயாரித்த ஒரு குறிப்பினை பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் சமர்ப்பித்திருந்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது  தனது முதல் பாராளுமன்ற உரையின்போதான கருத்துக்களுக்கு எதிராக  இனவாத கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு விக்னேஸ்வரன் பதில் அளித்தபோதே பேராசிரியர் பத்மநாதனின் குறிப்பினை சமர்ப்பித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முகவுரையாக உள்ளடக்கப்பட்டுள்ள பேராசிரியர் பத்மநாதனின் இந்த குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் இவைதான்:

“வடகிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்து வந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக்கற்காலம், பெருங்கற்கால மக்களின் ஒன்று கலப்பில் இருந்து தோன்றியவர்கள். இடைக்கற்கால கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முன் 28000 வருடகால நீண்ட இருப்பைக் கொண்டது ” என்று ஆரம்பிக்கும் இலங்கையில் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றை ஆதார தகவல்களுடன் வெளிப்படுத்தும் ஒரு அறிமுக குறிப்புடன் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் ஆரம்பிக்கிறது. இந்த அறிமுக குறிப்பினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சரித்திரப் பேராசிரியர் மற்றும் யாழ் பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் வழங்கியிருக்கிறார்.

தமிழ் மொழியினதும் இலங்கை வாழ் தமிழ்ச் சமூகத்தினதும் தொன்மை வடகிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்து வந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக்கற்காலம், பெருங்கற்கால மக்களின் ஒன்று கலப்பில் இருந்து தோன்றியவர்கள். இடைக்கற்கால கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முன் 28000 வருடகால நீண்ட இருப்பைக் கொண்டது. பெருங்கற்கால கலாசார மக்கள் திராவிடர்கள் என்று முன்னைய தொல்பொருளியல் ஆணையாளர் செனரத் பரணவிதான அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். இவர்கள் தென் இந்தியாவின் பல பாகங்களிலும் இருந்து கிறிஸ்துவுக்கு முன் 800ம் ஆண்டளவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் ஆவார்கள். இவ்விருசாராரும் ஒன்றிணைந்ததானது ஒரு நீண்டகால செயற்பாடாகும். இவ்வொன்றிணைதலானது ஆரம்ப சரித்திர காலமான கி.மு 250 தொடக்கம் கி.பி 300 வரையிலான காலத்திலேயே முழுமையடைந்தது.
பெருங்கற்கால கலாசாரமானது நாகர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களாகவும் வாணிபம், பண்பாடு போன்றவற்றைப் பற்றி உபகண்டத்தில் தமிழ் நாட்டுக்கு அப்பால் வாழ்ந்த மக்களுடன் பேசும் போது பிராகிருத மொழியை தொடர்பாடல் மொழியாகப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள்.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி இலங்கையின் பல பாகங்களில் தமிழ் ப்ராமி எழுத்துப் படிவங்களில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் காணப்பட்டதாகவும், கல்மேடைகளில் (Dolmens) தமிழ்மொழி காணப்பட்டதாகவும் மற்றும் பல பிரேத அடக்க அல்லது தகன இடங்களில் உள்ள நினைவுச்சின்னங்களிலும் தமிழ் மொழி காணப்பட்டதாகவும் அறியத் தந்துள்ளனர்.
இவற்றில் நாகர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் வேள் எனப்படும் மக்கட் தலைவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவுந் தெரிய வருகின்றது.

பெருங்கற்கால கலாசாரத்துடன் தமிழ் மொழிக்கு கிட்டிய உறவு இருப்பதை வைத்து பெருங்கற்காலம் அறிமுகப்படுத்தப்பட்ட காலமான கி.மு 800ம் ஆண்டு தொடக்கம் தமிழ் மொழியானது இந் நாட்டில் பேசப்பட்டு வந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.

தமிழ் ப்ராமி பொறிப்புக்களைக் கொண்ட மனித கைத்திறன் கொண்டு உண்டாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உருப்படிகள் பல வகையாகவும் பல இடங்களிலும் காணப்பட்டுள்ளன. அவை மடபாண்டத் துண்டுகளிலும், எண்ணை அழுத்திகள், உரல்கள், அம்மிகள், முத்திரைகள், உலோகத்தால் மற்றும் களிமண்ணிலாலான விளக்குகளில் காணப்படுகின்றன. மற்றும் சைவம், நாக மரபு, பௌத்தம் ஆகியன சம்பந்தமான வழிபாட்டு, பூஜைச் சின்னங்கள் போன்றவற்றிலும் காணப்படுகின்றன.

மேலும் குன்றுகளில், கற்பாறைகளில், வயல் வெளிகளில், வனங்களில், சுவர்களில், சமயசார்பற்ற மற்றும் சமய ரீதியான நினைவுச் சின்னங்கள் போன்றவற்றிலும் காணப்பட்டுள்ளன. பலவிதமான சான்றுகளில் இருந்தும் அவை காணப்பட்ட பலதரப்பட்ட இடங்களில் இருந்தும் இந் நாட்டில் பிரதேச ரீதியாகப் பக்கம் பக்கமாக உள்ள சுமார் நாலில் ஒரு பங்கு நிலத்தின் மீது தமிழ்மொழி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது என்று காணக்கூடியதாக உள்ளது.

அரும்பொருள் விளக்கம்:
கற்காலம் – மூன்று பிரிவுகள் உண்டு. அவையாவன
1. பழங் கற்காலம் (Paleolithic)  – கி.மு. 30000 தொடக்கம் கி.மு. 10000   ஆண்டுகள் வரையில்
2. மத்திய கற்காலம் (Mesolithic) – கி.மு. 10000 தொடக்கம் கி.மு. 800 ஆண்டுகள் வரையில்
3. புதிய கற்காலம் (Neolithic)  –  கி.மு 800 தொடக்கம் கி.மு. 300 வரையில்
மத்திய கற்காலத்தில் கைபிடியுடனான கல்லால் ஆன Megalithic கருவிகள் பாவிக்கப்பட்டன.

திராவிடர்கள் – கிமு 20ம் நுற்றாண்டில் இருந்து 11ம் நூற்றாண்டு வரையில் இந்திய உபகண்டத்தில் பெரும்பான்மைக் குடிகளாக வாழ்ந்தவர்கள்.

புராதன சரித்திர காலம் – கி.மு 6ம் நூற்றாண்டில் இருந்து 4ம் நூற்றாண்டு வரை

நாகர்கள் – இலங்கையின் ஆதிக்குடிகள்.

ப்ராகிருதம் – இந்தியாவின் ஆதியிலும் மத்திய காலத்திலும் பேசப்பட்ட பேச்சு மொழிகள். ப்ராமி எழுத்துப் படிவம் – ஆதித் தமிழ் எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்துப் படிவம். (கீழடியில் காணப்பட்ட வைகைப் பள்ளத்தாக்கு நாகரிகம் மேலும் சிந்துநதிப் பள்ளத்தாக்கின் நாகரிகம் போன்றவற்றைப் படிக்க) டொல்மன் – கல்லால் ஆன மேடை மரணம் சார் நினைவுச் சின்னங்கள் – புதைத்தல், தகனம் போன்றவை செய்த போது வடிவமைக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்.