மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி! – ஜனாதிபதி

SHA6406
SHA6406

மேல் மாகாணத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இம்மாத இறுதிக்குள் கொரோனாத் தடுப்பூசிகளைச் செலுத்துமாறு சுகாதாரத்துறைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பணிப்புரை விடுத்துள்ளார்.

தடுப்பூசி திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கொரோனாக் கட்டுப்பாட்டுப் பணிக்குழுவுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனைக் கூறினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொள்வனவுக்கான கட்டளைகள் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதும், முறையான திட்டத்தின் கீழ், செப்டெம்பர் மாதத்துக்கு முன் நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் அதிக சதவீதத்தில் தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாம் டோஸூக்குத் தேவையான அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில், அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவருக்கும் அதன் இரண்டாவது டோஸை முறையாக வழங்குவதற்குத் திட்டமிடுமாறும் ஜனாதிபதி, சுகாதார அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் தற்போது வரை 28 இலட்சத்து 89 ஆயிரத்து 602 பேருக்குத் தடுப்பூசியின் முதலாவது டோஸூம் மற்றும் 11 இலட்சத்து 46 ஆயிரத்து 978 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸூம் வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், 30 வயதுக்கு மேற்பட்ட வயதினரில் கொழும்பு மாவட்டத்தில் 60 வீதமானவர்களுக்கும், கம்பஹா மாவட்டத்தில் 47 வீதமானவர்களுக்கும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 34 வீதமானவர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.