தமிழர்களுக்கு சுதந்திரமான எதிர்காலமே இல்லை – சத்திவேல்

IMG 20210924 092545
IMG 20210924 092545

தமிழர்களுக்கு சுதந்திரமான எதிர்காலமே இல்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களின் அமைதியான வாழ்வுக்கான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து சமயங்கள் போற்றும் அஹிம்சையை வாழ்வாக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகியான திலீபன் நினைவாக விளக்கேற்றக்கூடாது என தடை விதித்ததோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவர் ஏற்றிய விளக்கினை காலால் உதைத்தமை பேரினவாதம் தமிழர்களின் நெஞ்சில் சப்பாத்துக் கால்களால் உதைத்தமைக்கு ஒப்பாகும். அதுமட்டுமல்ல தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகின்ற ஈனச் செயலுமாகும்.

அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவரை கைது செய்யாது அரசு சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு சுதந்திரமாக இருக்க அனுமதித்து இருப்பது பயங்கரவாதம். போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்களுக்கு பாதுகாப்பும், பதவி உயர்வுகளும் கொடுப்பது பயங்கரவாதமாகும். அதேபோன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதும் பயங்கரவாதமாகும்.

இத்தகைய அரச பயங்கரவாதத்தின் சொந்தக்காரர்கள் சர்வதேசத்துக்கு முன்னால் நீலிக்கண்ணீர் வடித்து “நாட்டை காப்பாற்றுங்கள்” என கூறுவது ஏமாற்று நாடகம். “புலம்பெயர் சமூகமே பிரச்சினையை பேசித் தீர்ப்போம்” என கூவி அழைப்பது ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே. இத்தகைய பின்னணியிலேயே திலீபனுக்கு ஏற்றப்பட்ட விளக்கு காலால் உதைக்கப்பட்டது. இது புலம்பெயர் சமூகத்தையும் எட்டி உதைப்பதற்கு சமமாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும், ஐக்கிய நாடுகள் சபையும் நீதி கோரி நிற்கும் ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் தமிழர்களுக்கு நடந்ததை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தீர்ப்புக்கு கொண்டு செல்ல வழிவகுக்க இடமளிக்க வேண்டும். உங்கள் பிரதிநிதி ஒருவரை தமிழர் பிரதேசத்தில் நிலைநிறுத்த வேண்டும்.அதன் மூலமே நல்லிணக்கம் ஏற்பட வழி வகுக்க முடியும் என்றார்.