அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லாத நான்கு திணைக்களங்கள்: சாள்ஸ் நிர்மலநாதன்

sarlsh
sarlsh

வனஇலாகா, வனஜீவராசிகள், மகாவலி, தொல்பொருள் திணைக்களம் இந்த நான்கும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த பிக்குகள் தான் வழி நடத்துகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முழுமையாக தமிழர்களது இன விகிதாசாரத்தை இல்லாதொழிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 1988 ஆம் ஆண்டு மகாவலி  எல் வலயம் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டு இன்று 34 வருடங்கள் முடிந்திருக்கிறது. அதில் வவுனியா, முல்லைத்தீவு உள்ளடங்களாக பல பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. அவர்களது தங்களது செயற்பாட்டின் காரணமாக வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தென்பகுதி மக்களுக்கு வழங்கும் செயற்பாடு தொடர்ந்தும் நடைபெறுகிறது.  மகாவலி எல் வலயத்தால் இந்த இரண்டு மாவட்டங்களில் ஒரு தமிழருக்கு கூட காணி வழங்கப்படவில்லை. எனவே மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தற்போது ஒரு சாதகமான நிலை உள்ளது. கடந்த காலங்களில் விவசாய அமைச்சர் ஒருவராக இருப்பார். வனஇலாகா, வனஜீவராசிகள் அமைச்சர் வேறு ஒருவராக இருப்பார். ஆகவே சில விவசாயிகளின் பிரச்சனையில் இரண்டு அமைச்சுக்கள் தொடர்புபட்டிருநக்கும். தற்போது ஒரே அமைச்சர். விவசாயம், வனஇலாகா அமைச்சர் இரண்டும் ஒருவரே. அமைச்சர் மகிந்த அமரவீரவே அவர். அதுவும் எப்ப மாறுதோ தெரியாது. விவாசாயிகளின் கோரிக்கையை ஒரு குழுவாக கொண்டு செல்லும் போது எமக்கு ஒரு சாதகம் இருக்கிறது. அவர் ஒரு சில விடயங்களை பரிசீலிக்க கூடியவர். இதற்கு ஒரு கூட்டு முயற்சி சாதகமாக அமையும்.

விவசாயத்தையும், கால்நடையையும் பிரித்து பார்க்க முடியாது. இந்த விடயங்கள் தொடர்பில் ஒரு கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். வனவிலங்களால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. செட்டிகுளத்தில் இவ்வாறான அதிக பல பாதிப்புக்கள் ஏற்படுகிறது. குரங்குகளின் தொல்லை அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் யானைகளின் செயற்பாட்டாலும் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியுள்ளது.

எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தொடர்சியாக கதைத்தும் எதுவும் நடக்கவில்லை என விவசாயிகள் கூட்டங்களுக்கு வருவதில்லை என நினைக்கிறேன். வனஇலாகா, வனஜீவராசிகள், மகாவலி, தொல்பொருள் திணைக்களம் இந்த நான்கும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த அமைப்புக்கள் தான் வழி நடத்துகின்றன. அமைச்சர் ஏதாவது கதைத்தால் அவரது தொகுதியில் உள்ள பிக்கு அது பற்றி கதைக்க வேண்டாம் என்கிறாராம். ஆகவே இன்றைய நிலமையை புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.