கோட்டபயவின் காலத்து கரும வினைகள் போன்று ரணில் காலத்திலும்-சிறிதரன்

1642297502 sridaran 2
1642297502 sridaran 2

கச்சதீவு உள்ளிட்ட இடங்களில் புத்தர் குடியேறி இடம்பிடிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபடும் நிலையில், கோட்டபாயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மிக முக்கியமான வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெடுக்கு நாறி எனும் பகுதியிலே நீண்ட நெடுங்காலமாக வரலாற்று ரீதியிலே சைவத்தமிழ் பாரம்பரியத்தோடு ஆதி சிவனை வழிபட்டு வந்த மூதாதையரும் அந்த பரம்பரையும் அந்த மண்ணில் இருக்கின்றார்கள்.

அவ்வாறா வெடுக்குநாறி சிவனாலயமும், அந்த சிவனாலயத்தின் பரிபாலய தெய்வங்களான அம்மன், பிள்ளையார், வைரவர் போன்ற கடவுள்களுடைய சிலைகளும் அடித்து உடைத்து சிதைக்கப்பட்ட விடயத்தை நாங்கள் நேற்று பார்க்க கிடைத்தது.

மிக முக்கியமாக வெடுக்குநாறி மலை என்பது தொல்பொருளிற்குரியதென்றும், அங்கு யாரும் பிரவேசிக்க வேண்டாம் என நீதிமன்றம் கட்டளையிட்டதற்கு அமைவாக அந்த ஆலயத்தை பூசித்தும், பராமரித்தும் வந்த பூபால் ஐயாவும், ஏனைய பூசகர்களும் அந்த இடத்திற்கு செல்ல முடியாமல் அவர்கள் வேதனைப்பட்டுக்கொண்டு நீதிமன்ற கட்டளையை மதித்து நடந்தார்கள்.

அவர்கள் மீதுதான் பிக்குமாரும், தொல்பொருள் திணைக்களமும் அவ்விடத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். அதையெல்லாம் தாண்டி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளித்து அவர்கள் அந்த இடத்திற்கு செல்லாது இருந்தபொழுது, அந்த இடத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு தரப்பினர் அவ்விடத்திலிருந்த ஆதி சிவனுடைய சிவலிங்கத்தையும், அம்மன், பிள்ளையார், வைரவர், முருகன் சிலைகளையும் சிதைத்து தூக்கி எறிந்திருக்கிறார்கள்.

இது இந்த நாட்டில் மிகவும் கேவலமான செயல். தாங்கள் செய்த கர்மம் என்பது கோட்டபாயவின் காலத்தில் அவருக்கு வெளிப்பட்டிருந்தது. அதனைத்தாண்டி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவில் காலத்திலும் கரும வினைகளை அவர்கள் சந்திக்கப்போகின்றார்கள்.

இது தெய்வ அனுக்கிரகத்திற்குட்பட்ட விடயம். ஏற்கனவே குருந்தூர் மலையில் ஒரு விகாரையை கட்டக்கூடாது என முலை்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. இலங்கையில் நீதிமன்றத்தின் நியாய ஆதிக்கங்கள் மீறப்பட்டு அந்த நீதிமன்றத்தின் நட்ட நடைமுறைகள் மீறப்பட்டு நீதிமன்றம் அவமதிக்கப்பட்டு அங்கு புத்த விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

விகாரையிலே வைக்கப்பட்டுள்ள தூபி ஒரு சிவலிங்கமாகும். அவ்வாறு குருந்தூர் மலையில் கட்டவேண்டாம் என்ற விடயத்திற்கு மாறாக கட்டியிருக்கின்றார்கள். வெடுக்குநாறி மலையில் இருந்த சிவனாலயம் இருக்கட்டும் எனவும், அரு தரப்பினரும் அங்கு செல்ல வேண்டாம் எனவும் கட்டளையிடப்பட்டிருந்த நிலையில், இன்று அங்கிருந்த விக்கிரங்கள் உடைத்தெறியப்பட்டிருக்கிறது என்றால், மிக மோசமான காரியம். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இலங்கையினுடைய ஆட்சியாளர்கள் எங்கெங்கு பௌத்தங்களை வைக்க முடியுமோ வைத்து, அந்த இடங்களை ஆக்கிரமிக்க மிகக் கடுமையாக ஈடுபடுகின்றார்கள் என்பதை மிகத்துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது.

மிக முக்கியமாக அண்மையிலே, கச்சதீவில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவு பங்குத்தந்தையாக இருக்கின்ற தந்தை வசந்தன் அவர்கள் நேரடியாக கச்சதீவில் புத்தர் சிலை எழுப்பப்பட்டிருப்பதை நேரடியாக கண்டிருக்கி்றார்.

இம்முறை 40 பிக்குமார்கள் கச்சதீவுக்கு சென்றிருக்கின்றார்கள். கச்சதீவு என்பது வடக்கு மகாணத்தில் யாழ்ப்பாணத்தோடு சேர்ந்த ஒரு தொகுதி. அங்கு இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த மக்களும் வருவார்கள். இலங்கையில் இருக்கின்ற மக்களும் செல்வார்கள்.

அப்படியான இடங்களிலும் புத்தர் குடியேறி இடம்பிடிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றார். குருந்தூர் மலையில் புத்தர் சிலை இருப்பதாக குறிப்பிட்டு இன்று 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை பறிப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இன்று காட்டுக்குள் இருக்கின்ற, கால காலமாக பொங்கல் செய்து வழிபட்டுக்கொண்டிருக்கின்ற ஆதிசிவன் ஆலயத்தை வெடுக்குநாறி மலையிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் புத்தர் சிலையை வைத்து அந்த பிரதேசங்களை தங்களுடைய பிரதேசங்களாக மாற்ற முயற்சிக்கின்றார்கள்.

இந்த நாட்டில் ஜனாதிபதி, அதற்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் உட்பட இனவாதத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த செயற்பாடுகள் வெளிக்காட்டுகின்றன.

இலங்கையிலே நீதிமன்றங்களால் எதுவும் செய்ய முடியாது. நீதிமன்றங்கள் அப்பாவிகளையும் அல்லது நீதிமன்றங்களுக்கு எதிராக பேசுபவர்களையும்தான் அடைக்க முடியும் என்ற சட்டம்தான் இன்று இலங்கையிலே செல்லுபடியாகின்றதே தவிர, நீதிமன்றத்தின் ஊடாக இன்று தடுக்கப்பட்ட சட்டங்கள் அல்லது மீறி செயற்படுபவர்களை கைது செய்யவோ அல்லது தடுக்கவோ முடியாமல் இருக்கின்றமை மிக மிக துர்ப்பாக்கியமானது.

அது இலங்கையில் இருக்கின்ற சட்டத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது. ஆகவே நாங்கள் தொடர்ந்தும் இந்த விடயத்திற்காக குரல் கொடுப்போம். தொடர்ந்தும் ஆதிசிவன் ஆலயம் வெடுக்குநாறி மலையில் இருப்பதற்கான முழுவகையான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் வரும் வியாழன் அன்று மிகப்பெரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டும், இவ்விடயம் தொடர்பில் அவர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடுகளையும் செய்து போராட்டங்களையும் முன்னெடுத்து இந்த உருவச்சிலைகளை இருந்த இடங்களில் மீள வைக்கும் வரை தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒற்றுமையாக இந்த பணியை செய்ய வேண்டும்.

இதிலே, அரசியல், கருத்து வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு நாங்கள் சைவத்தமிழர்கள், இந்துத்தமிழர்கள் எல்லோரும் இணைந்து பிடுங்கப்பட்ட சிலைகளை அங்கு கொண்டு சென்று அதனை பிரதிஸ்டை செய்து தொடர்ந்தும் அந்த இடத்தில் வழிபாடுகள் இடம்பெறும் வகையில் எங்களுடைய செயற்பாடுகள் அமைய வேண்டும் என நான் வேண்டி நிற்கின்றேன் என தெரிவித்தார்