இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 4.25 லட்சத்தை தாண்டிய நிலையில், 2.37 லட்சம் பேர் குணமடைந்தனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 4,25,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 14,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 445 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13699 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,37,196 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,74,387 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 132075 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 59377 பேருக்கும், டெல்லியில் 59746 பேருக்கும், குஜராத்தில் 27260 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 11903 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.